சுருதிலயாவின் இசை ராஜாங்கம்
ஐஸ்வர்யா ரவியின் 'தமிழ் தாய்' வாழ்த்துடன் விழா ஆரம்பித்தது. அடுத்து ஜோன் தலைமை உரை வழங்கி மக்களை வரவேற்றார். இவ் உரையில், சுருதிலயா வெறும் ஐந்து மாத குழந்தை. தவழும் குழந்தைக்கு கைக் கொடுங்கள்... ஆதரியுங்கள்.. தடுக்கி விழுந்தால் தூக்கிவிடுங்கள் என்று வேண்டுகோள்விடுத்தார். சுருதிலயா குழந்தை, எழுந்து, நடந்து, ஓடி ஒரு ''இருமணி'' நேர இசை ராஜாங்கத்தையே நடத்தி முடித்தது.

விழாவின் அறிவிப்பாளர்களாக, ஹரியும் உமாவும் குழுவையும், பாடல்களையும், மறைத்தும் மறைக்காமலும் புதிர் போட்டு, ரசிகர்களை இசையுடன் இணைத்தா¡ர்கள். நான்கு பெண் பாடகிகளும் இரண்டு ஆண் பாடகர்களும் ஒரு சிறுமியும் பாடல்கள் வழங்கினார். இராஜ் முனுவின் விரல்களுக்கு இத்தனை சக்தியா? விரல்களினால் 'keyboard'ல் மந்திர வித்தை காட்டினார். keyboardன் வழியாக பல வாத்தியங்கள் இசை முழங்கின. இவருக்குப் பக்கபலமாக, வேராமன்ட் தபேலாவும், கார்த்திக் கிட்டாரும், மேனன் டோல்க்கி பொங்கஸ் வாத்தியங்களால் இசை வழங்கினார்.

முரளியின் பாடல்களில் அவரது சங்கீத ஞானம் தெரிந்தது. வசீகராவை அழைத்த ஐஸ்வர்யாவும் தனது சங்கீத புலமையை வெளிக்காட்டினார். தேரடிவீதியில், செம்பருத்தி பூவே என்று எம்பூர் ஹரிகரன் பாலாஜி ஐஸ்வர்யாவுடன் இணைந்து பாபாவிற்கு கிச்சு கிச்சு மூட்டினார்.

கலிபோர்னியா முத்தமிழ் சங்கத்தின் ஆதரவில் சுருதிலயாவின் இன்னிசை இரவு, கடந்த 19ம் தேதி ஏப்ரல் மாதம். torrance, armstrong theatreல் நடந்தேறியது. கலிபோர்னியா முத்தமிழ் சங்கத்தில் வெற்றிப் படிகளின் தொடர்ச்சியாக இந்நிகழ்வு அமைந்தது. பெரிய அளவில் எந்த ஒரு பத்திரிகை சஞ்சிகைகளில் அறிவிக்கப் படாமலும் தனியே கடந்த 3-4 கிழமைகளில் துண்டுப்பிரசுர விநியோகத்தாலும் தமிழ்ப்பட இமெயில் அறிவிப்பினாலும் 250-300 வரையிலான மக்களை கூட்டியிருந்தனர்.

இத்தகைய நிகழ்வு, மூன்று வயதுகூட ஆகாத கலிபோர்னியா முத்தமிழ் சங்கம், தென் கலிபோர்னியாவில் தமக்கென ஒரு தனி இடத்தை பிடித்துவிட்டதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. சங்கத்தின் தலைவர் ஜான் டேவிட் அவர்களின் கடின உழைப்பும், மனம் தளராத போக்கும், அவரதும் அவரது செயற் குழுவினராலும் திறமையான செயற்பாட்டு அணுகு முறையுமே இவ்வெற்றிக்கு காரணம் எனலாம்.

கொஞ்சும் மைனாக்களே, சின்ன சின்ன ஆசை என்ற இனிக்கும் கானங்களால் மக்களை கவர்ந்தார் செளமியா. அன்று ஊரு சனத்தை தூங்க வைத்த ஜானகியாக உத்ரா, உச்சஸ்தாயில் ரசிகர்களை அதிர வைத்தார். பின்னர் மகள் நிரோஷாவுடன் சக்க லக்க பேபி யாகவும், சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து என்ற பழைய பாடலையும் வழங்கி தனது நீண்ட கால இசைத் திறமையை புலப்படுத்தினார்.

பாட்டுப்பாடவா, அன்று வந்ததும் அதே நிலா போன்ற பழைய பாடல்களை முரளியும் சரயுவும் இணைந்து வழங்கி, பழைய பாடல்களின் மகிமையை உணர்தினர். இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்ற ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க சக்க லக்க பேபி திரும்பவும் இசைக்கப்பட்டது.

இடையில், பிரபல இசைமேதை ரோஸ் முரளி கிருஷ்ணன் முரளியுடன் இணைந்து இனி நானும் நான் இல்லை என்ற பாடலை ரசிகர்களுக்கு அளித்து அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

அனைத்து பாடல்களும் இணைந்து காதல் பஜன் பாபு இசை மழையை முடித்தனர். சங்கத்தின் செயலாளர் கணேவ்ரா நன்றி நவின்று விழாவை முடித்து வைத்தார்.

சுருதிலயாவின் வளர்ச்சிக்கு பின்னால், கலைஞர்களின் குடும்ப உறவுகள் பலர் திரைமறைவில் நிறைய உழைத்திருக்கிறார்கள். சுருதிலயாவின் இந்த இசை அமெரிக்காவின் மற்றும் நகரங்களுக்கும், மாநிலங்களுக்கும் பரவ வேண்டும். தார்மீக பணிகளுக்காக உழைக்கும், நிதிதிரட்டும் நிறுவனங்களுக்கு இசை நிகழ்ச்சி மூலம் உதவுவது என்பது சுருதிலயாவின் நோக்கங்களுள் ஒன்றாகும். இந்த பரீட்சார்த்த முயற்சிக்கு ஆதரவு வழங்கிய கலிபோர்னியா முத்தமிழ் சங்கத்திற்கு நன்றி.

பிரகாசம்

© TamilOnline.com