விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்திய "வாய் விட்டு சிரி" மற்றும் "பாட்டுக்குப் பாட்டு"
கடந்த மார்ச் மாதம் 9-ம் தேதி யூனியன் சிட்டி நூலகத்தில் "வாய் விட்டு சிரி" மாதாந்திர humor club கூட்டமும் "பாட்டுக்குப் பாட்டு" போட்டியும் விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்தியது. அங்கு நிரம்பிய கூட்டத்தை தன்னுடைய ஜோக்குகளால் வழக்கம்போல் கலகலக்க வைத்துக் கொண்டிருந்தார் திரு. ஸ்ரீகாந்த். பெரியவர்களுக்கு ஈடுகொடுத்துச் சிறுவர்களும் ஜோக்குகள் சொல்லி பங்கெடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கேட்ட சில ஜோக்குகள்:

சிறுமி கீர்த்தனா சொன்னது: Why was the wooden log scared to go to the boss’s home? Because it was afraid it will get fired.

ஆண்கள் பள்ளி ஒன்றில் நடந்த ஆண்டுவிழாவில் நடந்த கலாட்டவை நகைச்சுவையுடன் கூறினார் உப்பிலி ஸ்ரீனிவாசன்.

பாஞ்சாலி சபதம் நாடகத் தில் பாஞ்சாலியாக நடிக்கும் சிறுவனுக்கு கிருஷ்ணராக நடிக்கும் சிறுவன் வந்து சேரவில்லை என்பது தெரியாது. துச்சாதனன் துகிலுரியும் காட்சியில் இவன் "கண்ணா, கண்ணா" என்று அலற, கண்ணன் வராமல் இவன் புடவையினுள் அணிந்திருந்த கால் சட்டை தெரிய ஆரம்பித்து விட்டதாம். திடுக்கிட்ட அனைவரையும் தன் சமயோசித புத்தியால் சட்டென்று "கண்ணா, என் மானத்தைக் காப்பாற்ற என்னை ஆணாக மாற்றிவிட்டாயே!" என்று கூறி சமாளித்து விட்டானாம்.

கர்நாடக இசையின் சுவரங்கள் மூலம் தான் கண்டு, கேட்டு ரசித்த பல ஜோக்குகளை ஆர்வத்துடன் பகிர்ந்து கொண்டார் திருமதி பத்மா ராஜகோபாலன்.

இப்படியாகச் சிறுவர் முதல் முதியோர் வரை வயது வரம்பின்றி வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் ஆர்வத்துடன் பங்கேற்றுக் கொண்டது மிகவும் சிறப்பாக இருந்தது.

அதனைத் தொடர்ந்து, திரு. சிவசுப்ரமணிய ராஜாவும், திரு. மௌலியும் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சியை நடத்தினர். ஒரு குழுவுக்கு இருவர் வீதம் பதினொரு குழுவினர் பங்கெடுத்துக் கொண்டனர். அவர்கள் குரலினிமையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு சுற்றும், ஒரு சொல், ஒரு சூழ்நிலை, ஒரு எழுத்து போன்றவற்றை வைத்து அதற்கேற்ப பாடச் சொல்லியும், சிறு பின்னணி இசையைக் கேட்டு பாடலைக் கண்டுபிடிக்கச் சொல்லியும் பங்கு பெற்றவர்கள், ரசிகர்கள் அனைவரையும் கவரும் வண்ணம், இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடை பெற்றது. சளைக்காமல் அதில் அனைத்திலும் வெற்றி பெற்று முதல் பரிசை திரு கருணாகரன் பழனிசாமி, திரு கோவிந்த் ஹரிதாஸ் குழுவினரும், இரண்டாம் பரிசை திருமதி கோமதி சங்கர், திருமதி ராதிகா முரளிதரன் குழுவினரும், மூன்றாம் பரிசை திரு ஸ்ரீதரன் மைனர் குழுவினரும் தட்டிச் சென்றனர்.

பல அரிய பழைய பாடல்களைக்கூட பங்கேற்றவர்கள் அருமையாகப் பாடியதை வியந்த வண்ணம் கூட்டம் கலைந்தது.

தனிமை

சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் வழங்கும் "தனிமை" என்ற மேடை நாடகம் வரும் மே மாதம் 11ஆம் தேதி CET Performing Arts Center ல் மாலை 4:30 மணிக்கு நடக்க இருக்கிறது. (மேலும் விவரங்களுக்கு www.bayareatamilmanram.org)

கதாசிரியரின் வார்த்தைகளில் நாடகக் கரு

"தனிமை - சுப்ரமணிக்கு அதுதான் தேவையாய் இருந்தது. அன்பும் அரவணைப்பும் அபரிமிதமாய் கிடைத்த ஒரு கூட்டுக்குடும்பத்தின் கோலாகலச் சூழலில் அவனுக்குக் கிடைக்காமல் இருந்தது தனிமை ஒன்றுதான். இளமை ததும்பும் புது மனைவியோடு காதல் வாழ்க்கை வாழத் துவங்கிய அவன் ஏங்கியது அதற்குத்தான். எல்லோருக்கும் பொதுவான வாழ்க்கை முறையும், தனிப்பட்ட சௌகர்யங்களைத் தியாகம் செய்வதுமாய் இருந்த கூட்டுக் குடும்பத்தின் பொது நியதிகள் அந்த இளவயதில் அவனுக்கு ஒவ்வாததாய்க் கூட இருந்தன. தான், தன்னுடைய குடும்பம், தனக்கென்று ஒரு வாழ்க்கை என்று அதன் பிடியிலிருந்து விடுபட்டு வெளிவந்து வாழவும் அவன் தயங்கவில்லை.

முப்பதுகளில் ஏங்கிய தனிமை சுப்ரமணிக்கு மூப்பில் கிடைத்தது. வாழ்க்கை ஓடிய நாற்பது வருடங்களின் இறுதியில், மனைவி மாரடைப்பில் மரித்து, மகன்கள் திரவியம் தேடி திசைகள் பலவாய்ப் பறந்தோடிய பிறகு அவருக்குக் கிடைத்தது அவர் சிறுவயதில் ஏங்கிய அதே தனிமைதான். எமனின் பாசக்கயிறாய் வியாதிகள் உடலை வருத்த, உணவு சிறுத்து, மருந்தே உணவாகி, பேசிப் பழக ஒரு துணையில்லாமல் கடந்த கால நினைவுகளோடு மனதில் மல்யுத்தம் செய்யும் தனிமை. இளவயதில் அவர் ஏங்கிய தனிமை, தள்ளாத வயதில் அவரை வருத்தி மரணத்தின் கைப்பிடிக்குள் அவரைக் கொண்டு சென்றது.

கழிவிரக்கமும் சுயபச்சாதாபமும் சூழ விரக்தியின் விளிம்பில் இருக்கையில் அவருக்குக் கிடைத்தது - ஒரு சிநேகம். கடினமான வாழ்க்கைப் பாதையை மனவலிமையோடு போராடி எதிர்நீச்சல் போட்டு வெற்றி கண்ட ஒரு அந்நியரின் சிநேகம் தான் வாழ்க்கை பற்றிய அவர் கண்ணோட்டத்தை மாற்றி அமைத்தது. வயோதிகம் கூட வாலிபப் பருவத்தின் முறுக்கோடு வாழ வைக்கும் என்று "வாக்கிங் ஸ்டிக்கை" தூர எறிய வைத்தது.

ஆனந்த் ராகவ்

******


சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்திற்காக தீபா ராமானுஜம் குழுவினர் வழங்கும் நாடகத்தின் சாராம்சம்தான் இது. உணர்ச்சி ததும்பும் இந்த நாடகத்தினை எழுதியிருப்பவர் ஆனந்த் ராகவ். (பாங்காக்). மூன்று வருடங்களாய் எழுதிக்கொண்டிருக்கும் ஆனந்த் ராகவ், அறிமுகமானது ஆனந்த விகடனில். பெரும்பாலான படைப்புகள் விகடனில் தான் வெளிவந்துள்ளன. இதுவரை சிறுகதைகளும், கட்டுரைகளும், ஒரு கட்டுரைத் தொடரும், கவிதைகளும் விகடன், கல்கி, கலைமகள், குமுதம், அமுதசுரபி, திண்ணை போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகி உள்ளன. இவரது படைப்புகள் விகடன், கலைமகள், அமுதசுரபி, குமுதம் நடத்திய போட்டிகளில் பல பரிசுகளை வென்றுள்ளன. இவையே எழுத்துக்குக் கிடைத்த சில அங்கீகாரங்கள். தாய்லாந்து தென்னிந்தியச் சங்கத்திற்காக சிறு நாடகங்கள் எழுதி மேடையேற்றுகிறார். இது வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்திற்காக இவர் எழுதும் மூன்றாவது நாடகம்.

இந்த நாடகத்தை இயக்கி இருப்பவர் தீபா ராமானுஜம். பல நாடகங்களில் நடித்த அனுபவம் உள்ள இவர் சென்னைத் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக ஆரம்பித்து ராஜ், விஜய் போன்ற தனியார் தொலைக்காட்சிகளிலும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியிருக்கிறார். பல மேடை நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்த அனுபவமும் இவருக்கு உண்டு. தொலைக்காட்சித் தொடர் களில் நடித்தும் இருக்கிறார். இவர் நடித்த தொடர்களில் குறிப்பிடத்தக்கவை - K. பாலசந்தரின் "பிரேமி", ஆபாவாணனின் "சுந்தரவனம்", BR விஜயலக்ஷ்மியின் "மீண்டும் குட்டிச் சாத்தான்". தவிர பம்பாய் ஞானம் அவர்களின் 'மஹாலக்ஷ்மி பெண்கள் நாடகக் குழுவின்' சார்பில் பல மேடை நாடகங்களில் நடித்த அனுபவம் உண்டு. நடிப்பது மட்டுமல்லாமல், சில டாக்குமெண்ட்ரிகளையும் இயக்கி உள்ளார். இந்தியாவை விட்டு வெளியேறிய பிறகு பாங்காக்கில் தென்னிந்தியச் சங்கத்திற்காக மேடை நாடகங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார்.

அமெரிக்கா வந்த பிறகு தமிழ் மன்றத்திற்காக இரண்டு நாடகங்கள், மற்றும் Mostly Tamilன் நூறாவது நாள் நிகழ்ச்சியில், "ஒரு நாள் குடிமகன்" Indo American Group நடத்திய தீபாவளி நிகழ்ச்சியில் குழந்தைகளை வைத்து "Parent Trap" என்ற நாடகங்களை இயக்கியுள்ளார். Mostly Tamil வானொலியில் நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்பதில் பெரும் ஆர்வம் உள்ளவர். சென்ற வருடம் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் துணைத்தலைவி (கலைநிகழ்ச்சிகள்) ஆக பணியாற்றியுள்ளார்.

தமிழ் நாடக மேடையிலேயே முதல் முறையாக ஒரே கதாபாத்திரத்தில் இருவர் நடிக்கிறார்கள். இது ஒரு புதுமையான, வித்தியாசமான முயற்சி என்று இயக்குனர் தீபா ராமானுஜம் கூறினார். இந்த நாடகத்தைப் பற்றி அவர் கூறுகையில் - இந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களைக் கண்டிப்பாக நாம் எங்கேயாவது சந்தித்திருப்போம். நம்மில் பலரது வாழ்வில் நடந்திருக்கும் அல்லது நடந்து கொண்டிருக்கும் நிகழ்ச்சிகள் நிறைந்ததாய் இருக்கிறது "தனிமை". கதை இந்தியாவில் நடப்பதாக இருந்தாலும், இங்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் உணர்ச்சிகளைத் தூண்டுவதாய் அமைந்துள்ளது என்று கூறினார்.

******


கலா மந்திர் நாடகக் குழுவின் நிறுவனரும், 1978ல் ஆரம்பித்து 18 நாடகங்களுக்கு மேல் எழுதியவரும், தொலைக் காட்சியில் பல தொடர்களை இயக்கியவரும், தற்பொழுது சன் TV யில் வெளிவந்து கொண்டிருக்கும் "உதயம்" மற்றும் "ஜனனி" தொடர்களுக்குக் கதை வசனம் எழுது பவரும், 1000 முறைகளுக்கு மேல் நாடகங்களை இந்தியா முழுவதும் மேடையேற்றியவருமான, பாம்பே சாணக்யா இந்த நாடகத்தைப் பற்றிச் சொல்லும்போது, "இந்த நாடகத்தைப் படித்தவுடன் எனக்கு ஏன் இப்படி எழுத வரவில்லை என்ற ஏக்கம்தான் வந்தது. தனிமை அவ்வளவு தத்ரூபமாக யதார்த்தமாக உள்ளது. இதை எழுதிய ஆனந்த் அவர்களுக்கும், மேடை யேற்றவிருக்கும் தீபா ராமானுஜம் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்"

தீபா ராமானுஜம்

© TamilOnline.com