ஏன்?
மஹாத்மா காந்திக்குப் பிடித்தமானவற்றில் ஒன்று "மூன்று குரங்கு பொம்மைகள்". ஒரு குரங்கு பொம்மை, இரண்டு கைகளாலும் இரண்டு கண்களை மூடிக் கொண்டிருக்கும். இன்னுமொரு குரங்கு பொம்மை, இரண்டு கைகளாலும் இரண்டு காதுகளைப் பொத்திக்கொண்டிருக்கும். மூன்றாவது குரங்கு பொம்மை, இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டிருக்கும். இருப்பது ஒரு வாய்தான் என்றாலும் இரண்டு கைகளால் அந்த ஒரு வாயை மூடிக்கொண்டிருக்கும். ஏன்?

கண்கள் இரண்டு இருந்தாலும் 'பார்ப்பது' என்கிற ஒரு செயலை மட்டும்தான் அவை செய்கின்றன. அதேபோல் காதுகள் இரண்டு இருந்தாலும் 'கேட்பது' என்கிற ஒரு செயலை மட்டும்தான் அவை செய்கின்றன. ஆனால் வாய் ஒன்றேஒன்று இருந்தாலும் இரண்டு செயல்களைச் செய்கின்றன. என்ன புரியவில்லையா? உணவை ருசித்துச் சாப்பிடுவதும் வாய்தான்; உள்ளம் நினைப்பதைப் பேசுவதும் வாய்தான்; பழி, பாவம், பொறாமை, சூது, வாது, வஞ்சனை... என்று உள்ளத்து உணர்வுகளை எல்லாம் வார்த்தைகளில் கொட்டுவது இந்த வாய்தான். அதனால் தான் அதைப் பயன்படுத்துவதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இறைவன் கண்களையும் காதுகளையும் வெளிப்படையாகப் படைத்துவிட்டு, வாயை மட்டும் வேறு விதமாகப் படைத்துள்ளான். நாக்கை உள்ளே வைத்து, அதற்குப் பலத்த பாதுகாப்பு போல 32 பற்களையும் அடுத்தாற்போல் வைத்து, அதையும் தாண்டி உதடுகள் என்ற கதவுகளையும் படைத்து இருக்க வேண்டும். இத்தனை பாதுகாப்புகளையும் தாண்டி அந்த வாய் நினைப்பதை எல்லாம் பேசுவதைக் கண்டுதான் மூன்றாவது குரங்கு ஒரு வாயின் மீது இரண்டு கைகளையும் வைத்து (வாயின் மீது ஒன்றன்மேல் ஒன்றாக இரண்டு கைகளையும்) இறுக்கமாக மூடிக்கொண்டிருக்கிறது. இப்போது காரணம் புரிந்திருக்குமே!

டாக்டர். அலர்மேலு ரிஷி

© TamilOnline.com