கத்தரிக்காய் மசாலா கிரேவி
தேவையான பொருட்கள்

கத்தரிக்காய் - 5
தக்காளி பொடியாக நறுக்கியது - 1 1/2 கிண்ணம்
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 கிண்ணம்
சமையல் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
வேர்க்கடலை - 10
வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
சிவப்புமிளகாய் வற்றல் - 5
புதியதாக துறுவிய தேங்காய் துறுவல் - 2 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன்
தனியா பவுடர் - 1/2 டீஸ்பூன்
சீரக பவுடர் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்
மாங்காய் பொடி (ஆம்சுர் பவுடர்) - 1/4 டீஸ்பூன் (இந்தியன் கடைகளில் கிடைக்கும்)
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - கொஞ்சம்

செய்முறை

கத்தரிக்காயை காம்புடன் காஸ் அடுப்பில் நன்றாகப் படும்படி வைத்து சுடவும். எல்லா பக்கமும் அடுப்பின் தீ படும்படி மாற்றி மாற்றி வைக்கவேண்டும். கத்தரிக்காய் நன்றாக சுருங்கி தோல் கறுத்துவிடும். இதை நன்றாக ஆறவிட்டு பின்னர் தோலை நீக்க வேண்டும். காம்பையும் நீக்கி விடவும்.

வேர்க்கடலை, வெள்ளை எள், சிவப்பு மிளகாய் வற்றல் இவற்றை எண்ணெயில்லாமல் வாணலியில் சற்று வறுத்து, துறுவிய தேங்காய் துறுவலுடன் மிக்ஸியில் தண்ணீர் விட்டு நன்றாக சற்று நீர்க்க அரைத்துக்கொள்ளவும்.

அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும். பின் தக்காளி துண்டங்களைப் போட்டு வதங்கியபின்பு உப்பு, கரம் மசாலா பவுடர், மஞ்சள் பொடி, சீரகப் பொடி, தனியா பவுடர் எல்லாவற்றையும் போட்டு பொடி வாசனை போக வதக்கவும். அரைத்து வைத்துள்ள கலவையையும் போட்டு பத்து நிமிடம் கொதிக்க விடவும்.

பின்னர் மாங்காய் பொடியையும் கொதிக்க விடவும். மிக கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் விடவும். வேகவைத்த கத்தரிக்காயை போட்டு விண்டுவிடாமல் மிதமான தீயில் 5 நிமிடம் ஒன்று சேர கொதிக்கவிடவும். அடுப்பிலிருந்து இறக்கி கொத்தமல்லி இலைகளைத் தூவவும்.

இதை சாதத்துடனோ அல்லது சப்பாத்தியுடனோ கலந்து சாப்பிடலாம்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com