காட்டில் ஊஞ்சல்கள்
யானைக் குட்டி மலையப்பன்,
எலியின் குட்டி சுண்டு,
பூனைக்குட்டி புல்லையா
புலியின் குட்டி வேங்கை.

நாலு பேரும் காட்டோரம்
நடந்து வழி போனார்கள்.
ஆலமர நிழலிலே
அமர்ந்து களைப்பாறினார்.

ஊஞ்சலாட எண்ணினார்.
ஓணான் கொடியைப் பின்னினார்.
ஊஞ்சல் நல்ல ஊஞ்சலாம்
தனித் தனியே ஊஞ்சலாம்.

ஆல மரத்தில் ஊஞ்சலாம்
ஆனைக்குட்டி ஆடவே!
வேல மரத்தில் ஊஞ்சலாம்
வேங்கைக் குட்டி ஆடவே!

புன்னை மரத்தில் ஊஞ்சலாம்
பூனைக் குட்டி ஆடவே
என்ன மரத்தில் ஊஞ்சலாம்
எலிக் குட்டிக்குச் சொல்வாயே!

தங்கப்பா

© TamilOnline.com