'சுரபி' வழங்கும் இசை நிகழ்ச்சிகள்
கடந்த இரண்டு ஆண்டுகளாக விரிகுடாப் பகுதி மெல்லிசை ரசிகர்களைத் தரமான இன்னிசை மூலம் கவர்ந்து வந்துள்ளது 'சுரபி' இசைக் குழு.

சுரபியின் 'சமர்ப்பணம்' மெல்லிசை நிகழ்ச்சி, அக்டோபர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை சான் ஹோசே சி.இ.டி. கலை அரங்கத்தில் நடக்க இருக்கிறது. இதில் பழைய தமிழ்த்திரையின் மன்னர்கள் MGR, சிவாஜி கணேசன், ஜெமினி ஆகியோரின் படப்பாடல்களைக் கேட்டு ரசிக்கலாம். மேலும், அக்டோபர் 11ம் தேதி சனிக்கிழமை, சுரபியின் 'கலை விழா' மெல்லிசை நிகழ்ச்சி பிளசன்டன் பகுதியில் நடக்க இருக்கிறது.

இந்த இசைக் குழுவை உருவாக்கியவர்கள் பிரபு, முரளி கிருஷ்ணா மற்றும் ஆர்த்தி. இவர்களில் பிரபு, பிரபல திரைப்பட இசைக்கலைஞர்கள் P. சுசிலா, தேவா ஆகியரோடு நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார். சமீபத்தில், 'அருள் தரும் தெய்வங்கள்', 'சர்வம் சாய்ராம்' என்ற இரு ஒலி நாடாக்களை பிரபு வெளியிட்டுள்ளார். முரளி கிருஷ்ணா ஒரு சிறந்த மிருதங்க வித்வான். ஆர்த்தி, கர்நாடக இசையிலும், மெல்லிசையிலும் சிறப்பாகப் பாடுபவர்.

சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம், விரிகுடாப் பகுதி தமிழ் மன்றமும் தெலுங்கு மன்றமும் இணைந்து நடத்திய 'சங்கமம்' என்ற சிறப்பான இசை நிகழ்ச்சியை 'சுரபி' வழங்கியது. இந்த ஆண்டு, 'மனோரஞ்சன்' என்ற பன்மொழி இசை நிகழ்ச்சியைச் சிறப்பாக வழங்கியது.

"ரசிகர்களுக்குத் தரமான இசை நிகழ்ச்சிகளைத் தருவதே எங்கள் நேக்கம்" என்கிறார் இக்குழுவை உருவாக்கிய பாடகர் பிரபு.

மேலும் விபரங்களுக்கு: http://www.surabhee.net

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com