திமுக தேசிய முன்னணியில் நீடிக்குமா?
தேசிய முன்னணி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திமுக வருகின்ற மக்களவைத் தேர்தலில் அக்கூட்டணியிலே தொடருமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

திமுகவின் மாநாடு புதிய அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருமோ என்ற எதிர்பார்ப்பு மாநாடு தொடங்குவதற்கு முன்பே நிலவியது. ஆதலால் ஒட்டுமொத்த தமிழக அரசியல் நோக்கர்களின் பார்வை இம் மாநாட்டின் மீதே பதிந்திருந்தது.

மாநாட்டின் முதல்நாள் நடந்த உயர்மட்ட செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் இல. கணேசனைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்தது.

தமிழகத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் என்ற முறையில் அல்ல; அகில இந்திய பாஜக செயலர் என்ற முறையிலேயே கண்டித்தோம் என்று கணேசனுக்குப் பதில் அறிக்கையில் இரண்டாம் நாள் தெரிவித்தார் திமுக தலைவர்.

மாநில பாஜகவுடன் உறவு இல்லை என்ற நிலையில் இருந்து அகில இந்திய பாஜகவை எதிர்க்க திமுக தயாராகி விட்டதையே இந்த அறிக்கைப்போர் உணர்த்துகிறது.

அதுபோல் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் சிறைநிரப்பும் போராட்ட அறிவிப்பும் டில்லி அரசியலில் பாஜகவுடன் திமுக விலகிவரத் தயாராகிறது என்பதற்கானதாகவே தெரிகிறது.

மாநாட்டில் துரைமுருகன் ஆற்றிய உரை திமுகவின் உள்ளுணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது என்றால் ஆலடி அருணா பகிரங்கமாகவே தாக்குதலை தொடுத்தார். இவையெல்லாம் நடக்கும்போது மத்திய அமைச்சரவையிலிருக்கும் டி.ஆர். பாலு மேடையிலிருந்தார்.

ஆக பாஜகவிலிருந்து திமுக விலகுவதற்கு தாயாரான நிலையிலேயே இருப்பதாகவே இந்த மாநாடு உணர்த்துகிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com