புனிதமான புரட்டாசி
உலகத்தில் அனைத்து மனிதர்களும் புண்ணியத்தின் பலனான சுகத்தை விரும்புகின்றனர். ஆனால் புண்ணியத்தைச் செய்வதில்லை. அதுபோல் பாபத்தின் பயனான துன்பத்தை வெறுக்கின்றனர்; அதனை விரும்புவதில்லை. ஆனால் துன்பத்திற்குக் காரணமான பாபத்தைச் செய்கின்றனர். பாவத்தினால் துன்பம் பெருகுமே தவிர இன்பம் உண்டாகாது. நாம் செய்த பாபங்களைப் போக்கத் தவம் செய்ய வேண்டும். தவத்தினால் எல்லா தீயசக்திகளும் அழியும். எல்லா நன்மைகளும் ஏற்படும்.

தவத்தினால் பாபத்தைக் கழிக்கிறான். தவத்தினால் இம்மைப் பலன்களும் மறுமையில் இந்திர, சந்திர, ஆதித்ய, பிரம்மா முதலான பதவிகளும் உண்டாகின்றன. இந்திரன், யமன், குபேரன், வருணன், வாயு முதலான திக்பாலர்களும் இந்த உலகத்திற்குத் தினமும் நன்மை செய்யும் சந்திர சூர்யர்களும், பிரம்மாவும்கூடத் தவம் செய்துதான் பதவிகளைப் பெறுகின்றனர்.

விரும்பியபடி உணவு உண்பது, கண்டதைச் சாப்பிடுவது போன்றவற்றைத் தவிர்த்து பட்டினி இருந்து இறைவனைத் தொழுவது தவமாகும். ஊன் பெருக்கத்தைக் குறைத்து புத்தியை இறைவன்பால் செலுத்துவது தவமாகும்.

தவத்தினால் இறைவனையே காணலாமென்று வேதம் கூறுகிறது. அதனால் தவம் மிகவும் முக்கியம். நாம் தவம் செய்வதற்குக் காட்டிற்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

உணர்வுகளை அடக்கி எங்கு எவன் இறைவனை தியானிக்கிறானோ அங்கு குரு§க்ஷத்ரம், ஆரண்யம், புஷ்கரம் முதலான புனித §க்ஷத்திரங்களும், தீர்த்தங்களும் வந்து சேரும் என்பார்கள். அதாவது புண்ணிய §க்ஷத்ரவாசத்தாலும், புண்ணிய தீர்த்த ஸ்நானத்தாலும் ஏற்படும் பலன் அவனுக்கு கிடைக்கும் என்பது உட்பொருள். எல்லாம் அவனிருக்குமிடத்திலிருக்கும் விரதத்தைத் தவமென்றே கூறலாம். தவம் என்றால் விரதம் என்றுதான் பொருள். இறைவனை வழிபடுவது விரதம். உணவு உண்ணாமல் பட்டினி இருந்து மனத்தினால் இறைவனைச் சிந்தித்து வாயினால் அவனது நாமங்களைச் சொல்லி வழிபடுவதுவே விரதமாகும்.

விரதமிருக்கும் புண்ணியர்களை நோய் நொடிகள் அண்டாது. உடலிலிருக்கும் மலம், அழுக்கு அழியும். பாபம் நசிக்கும். சுகம் உண்டாகும்.

பாபத்தைச் செய்யத்தூண்டி துக்கத்தைக் கொடுக்கும் இந்த கோரமான கலியுகத்தில் மந்திரத்தாலும், ஹோமங்களாலும், விரதத் தாலும், ஜபத்தாலும் பாபங்கள் நசிந்து போகும்.

ஒவ்வொரு மாதத்திலும் விரத நாட்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் புனிதமான புரட்டாசி மிக உயர்ந்ததாகும். தமிழில் புரட்டாசி என்றும், ஸெளரமானத்தில் கன்யாமாஸமென்றும், சாந்த்ரமானத்தில் பாத்ரபதமென்றும் இப்புரட்டாசியைச் சொல்வார்கள்.

புரட்டாசி மாதத்தில் ஒருநாள்கூட மனிதன் உபயோகப்படுத்த முடியாமல் அல்லது உபயோகப்படுத்தக்கூடாத நாளாக இருந்து விரதத்திற்காக மட்டும் அமைந்திருக்கிறது.

ஸ்ரீவைகுண்டத்தில் ஆதிசேஷன்மேல் வீற்றிருக்கும் ஸ்ரீமன் நாராயணன் லீலாவிபூதியில் பாரததேசத்தில் ஆதிசேஷனை மலையாக ஆகும்படிச் செய்து அதன்மேல் நின்ற திருக்கோலமாகக் காட்சியளிக்கின்றான். திருமலையில், ஏன் நிற்கிறான் என்றால் திருவடி முதல் திருமுடி வரை நாராயணனைப் பார்த்தால் மகாபாவங்கள் யாவும் விலகுகின்றன. சிறிய பாபங்கள் விலகிப் போகுமென்று சொல்ல வேண்டுமா? ஆகையால்தான் திருவடி முதல் திருமுடி வரை பக்தர்கள் வணங்கிடும் விதத்தில் அழகாக நிற்கின்றார். அப்படிப்பட்ட திருவேங்கடவனின் அவதாரமாதம் புரட்டாசியாகும். மேலும் அவருடைய அபராவதாரமான ஸ்வாமி தேசிகனும் அவருடைய அபராவதாரமான ஸ்ரீ ஆதி வண்சடகோப மஹா தேசிகனும் அவதாரமான மாதம் புராட்டாசியே ஆகும். ஆகையால் அவர்களுடைய திருநட்சத்திர மஹோத்சவங்கள் இந்த மாதம் பூராவும் நடைபெறுவதால் மற்ற எதுவும் செய்ய வழியில்லை. அதனால் புரட்டாசி உயர்ந்தது.

மார்கழி மாதம் பூராவும் பகவானை ஆராதிக்கும் நாள்தான். ஆனால் இரண்டு அம்சங்கள் புரட்டாசிக்கு அதிகமாக உண்டு. தேவதா ஆராதனத்துடன் பித்ருக்கள் ஆராதனமும் இம்மாதம் செய்யப்படுகிறது. பித்ருக்கனை ஆராதிக்கும் மஹாளயம் ஒன்று, பெண்களுக்கு மிகவும் மனமகிழ்ச்சியைத் தரும் நவராத்திரி உத்சவமும், ஆக இரண்டு. ஆகையால் புரட்டாசி பெருமை பெறுகிறது. பகவானையும், பித்ருக்களையும், ஆசார்யர்களையும், பெண் கடவுளரான துர்கை, லட்சுமி, சரஸ்வதி இவர்களையும் ஆராதிப்பதால் தன்னிகரில்லாத் தனித்தன்மை பெறுகிறது புரட்டாசி.

மற்ற மாதங்களில் உள்ள விழாக்கள் ஒன்று, இரண்டு, மூன்று நாட்கள் இப்படிச் சிறிய அளவில்தான் இருக்கும். ஆனால் பித்ருக்களை ஆராதிக்கும் நாட்கள் பதினைந்தாகும். நவராத்திரி ஒன்பது நாட்கள். மற்ற விழாக்களில் சில மணிநேரம் சுத்தமாயிருந்து நடத்தப்படுகிறது. மாளயத்தில் எப்பொழுதும் சுத்தமாக இருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

நவராத்திரியில் இரவு வேளையில் வைபவம் அதிகம். திருக்கோயில்களில் பெருமாள் பிராட்டியாருக்குக் கோலகாலமாக உத்சவம் நடைபெறுகிறது.

இவ்வாறு திருவேங்கடமுடையான் அவதார உத்சவத்தாலும், ஸ்வாமி தேசிகன், ஸ்ரீமதாதி வண்சடகோப யதீந்திர மஹாதேசிகன் அவதார உத்சவங்களாலும், நவராத்திரி உத்சவத்தாலும், மகிமை வாய்ந்த மஹாளயத்தினாலும் புரட்டாசி மிக உயர்ந்ததாக விளங்குகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com