அதிரடி சட்டங்கள்: தமிழகம் முதலிடம்
சமீபகாலமாக தமிழக அரசு பல அதிரடி அவசர சட்டங்களை கொண்டு வந்து பலத்த விமர்சனங்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது.

மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என்ற தமிழக அரசின் அவசரச் சட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் மதுபானக் கடைகளை இனி அரசே நடத்தும் எனும் புதிய அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து பல மதுபான கடை உரிமையாளர்கள் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். எந்தவித முன்னறிப்பும் இன்றித் தன்னிச்சையாக தமிழக அரசு செயல்படுவதாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அவசரசட்டம் 2001-2004ம் ஆண்டுகளில் மதுக்கடைகளின் உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ள அதன் உரிமையாளர்களுக்கு உரிமை உள்ளது என்று உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை மீறும் வகையில் உள்ளது.

டாஸ்மாக்கிடம் மதுக்கடைகளைக் கொடுப்பதன் மூலம் இந்த வர்த்தகத்தில் ஏகபோகத்தை ஏற்படுத்த முயற்சிப்பது அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 14க்கு எதிரானது என்ற ரீதியில் அவர்கள் மனுக்களின் விவரங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.

அரசின் பணி நிர்வாகமா, வணிகமா?

கேடிஸ்ரீ

© TamilOnline.com