பாரத விலாஸ் பாட்லக்
ஆகஸ்ட் பதினைந்தை இந்தியக் குடும்பங்கள் பல விதமாகக் கொண்டாடியிருப்பார்கள். தமிழ்நாடு, கேரளா, ஆந்திராவைச் சேர்ந்த சில குடும்பங்கள் சேர்ந்து சுதந்திர தினத்தை விதவிதமான உணவு வகைகளோடு வித்தியாசமாகக் கொண்டாடினோம். என்னோடு சேர்ந்து பத்மா கல்யாணராமன், சுதா ஹரி பெண்ட்யாலா, ப்ரஸன்னா கணேசன், ஸ்ரீரஞ்ஜனி கிருஷ்ணகுமார் ஆகியோர் வழங்கும் சுவாரஸ்யமான சில செய்முறைகள் இதோ உங்களுக்காக:

தஞ்சாவூர் மசாலா மோர்க்குழம்பு

இதை விருந்தில் சேர்த்துக் கொண்டால், சுகமான தூக்கம் வரும்(!)

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 5
வெங்காயம் - 3
கருவேப்பிலை - சிறிது
புளித்த கெட்டித் தயிர் - 1 கிண்ணம் (Pavel ப்ராண்ட் போன்றவை)
தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
வற்றல் மிளகாய் - 3 (அல்லது காரத்துக்குத் தக்கபடி)
மஞ்சள் பொடி - 1 சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
கசகசா - 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் - 2
கிராம்பு - 2

செய்முறை

உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை உரித்து, குழம்புக்கு வேண்டிய பதமாகத் துண்டங்களாக்கவும். வெங்காயத்தை வதக்கிக் கொள்ளவும்.

தேங்காய், வற்றல் மிளகாய், கசகசா, ஏலக்காய், கிராம்பு இவற்றைத் தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்து, வேகவைத்த உருளைக்கிழங்கு, வெங்காயம், மஞ்சள், உப்பு இவற்றுடன் சிறிது தண்ணீர் விட்டு ஒரு கொதி விடவும்.

பிறகு தயிரைச் சேர்த்து, பச்சை வாசனை போகக் கொதிக்க விட்டு கருவேப்பிலை சேர்த்தால் மணக்க மணக்க மசாலா மோர்க்குழம்பு தயார்.

(கசகசா லேசில் அரைபடாது, வாங்கியவுடன் தண்ணீர் விடாமல் வெறும் வாணலியில் சிறிது சூடாக வறுத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.)

உமா வேங்கடராமன்

© TamilOnline.com