கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் 2007 ஆண்டுவிழா
சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தமிழ்க் கல்வி போதித்துவரும் கலி·போர்னியா தமிழ்க் கழகம் (California Tamil Academy) தனது ஆண்டு விழாவை மே 20, 2007 அன்று ·புட்ஹில் கல்லூரி அரங்கத்தில் கொண்டாடியது.

சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் தமிழ்க் கல்வி போதிக்கும் நோக்கத்துடன் 1999ஆம் ஆண்டு இக் கழகம் நிறுவப்பட்டது. அத்துடன் இசை, நடனம், நாடகம் போன்ற தமிழர் பண்பாட்டு நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து வருகிறது. கலி·போர்னியாவின் கூபர்டினோ பகுதியில் 150 மாணவர்களுடன் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளி, இப்போது ·ப்ரீமாண்ட், சான் ரமோன் என்று பல கிளைகளுடன் நூற்றுக்கும் மேற்பட்ட
ஆசிரியர்களுடன், சுமார் 1000 மாணவர்களைக் கொண்டதாக வளர்ச்சி பெற்றுள்ளது. ஆசிரியர்கள் எல்லோரும் தன்னார்வப் பணியாளர்களே. இப்பள்ளியில், மாணவர்களின் வயதுக்கும், கல்வித் தரத்துக்கும் ஏற்பப் பாடங்கள் பல்வேறு நிலைகளில் போதிக்கப்படுகின்றன. தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தையும் தழுவி பாடங்கள் போதிக்கப்படுகின்றன.

ஆண்டு விழா முழுநாள் நிகழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது. நடனங்கள், நாடகங்கள், சொற்பொழிவுகள், பட்டிமன்றங்கள் மற்றும் தமிழிசை நிகழ்ச்சிகளை வழங்கிப் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். அகத்தியர் பற்றிய ஒரு நாடகம், தருமி, சொக்கர் உரையாடலை அடிப்படையாக வைத்து ஒரு நாடகம், தமிழ் நடிகர்கள் பலரைப் போலக் குழந்தைகள் பேசி நடித்த ஒரு நாடகம் என்று பல நாடகக் காட்சிகள் இருந்தன. தமிழ் கற்பதால் நன்மையா, தீமையா, தொலைக்காட்சி பார்ப்பதால் நன்மையா, தீமையா என்று பட்டிமன்றங்களும் இருந்தன. பிஞ்சுக் குழந்தைகள் ஆணித்தர மாக, அறிஞர்கள் போல் வாதிட்டது பார்ப்பவர்களை வியக்க வைத்தது.

ஏ.ஆர். ரகுமானின் வந்தே மாதரம் வாத்திய இசைக்கு இருட்டில் மெழுகு வர்த்தி நடனம் அமைத்திருந்தது மிக அருமையான முயற்சி. பாரதியாரின் 'சிந்து நதியின்மிசை' பாடலுக்கு நாட்டிய நாடகம் அமைத்தது மற்றுமொரு புது முயற்சி. 'உன்னை அறிந்தால்' பாடலுக்கு பொம்மலாட்டம் போல் குழந்தைகள் அருமையாக ஆடினார்கள்.

கலி·போர்னியா தமிழ்க் கழகத்தைத் தொடங்கி, இயக்கி வரும் வெற்றிச் செல்வி ராஜமாணிக்கம் அவர்கள் பட்டயங்கள் வழங்கி ஆசிரியர்களை கௌரவித்தார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த திரு பொன்னவைக்கோ தலைமை தாங்கினார். பேரா. ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் தமிழ்த் தேர்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி வாழ்த்துரை கூறினார். இந்திய தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

பாகிரதி சேஷப்பன்

© TamilOnline.com