எஸ்.வி. சேகரின் ஹாஸ்ய விருந்து
தமிழ் நகைச்சுவை நாடக உலகில் தனக்கென்று ஒரு இடம் உண்டு என்பதை விரிகுடாப் பகுதியில் எஸ்.வி. சேகர் மறுபடியும் நிரூபித்தார். குறுகிய காலமே 'தத்துபிள்ளை' நாடகம் விளம்பரப் படுத்தப் பட்டாலும், மாயா கிரியேஷன்ஸ் சார்பாக வழங்கப்பட்ட இந்த நாடகத்தைப் பார்க்க, ஃப்ரீமான்ட் கோம்ஸ் பள்ளியின் கலையரங்கு பிற்பகல் ஒரு மணியி லிருந்து கூட்டத்தால் நிரம்பி வழியத் தொடங்கியது. நாடகத்தைத் தொடர்ந்து எஸ்.வி. சேகருடன் கேள்வி-பதில் மற்றும் "கணவன் மனைவிக்கு இடையில் ரகசியம் இருக்கலாமா? கூடாதா? " என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றமும் நடைபெற்றது. கேள்வி பதில் நேரத்தில் அவருடைய நாடகங்களைப் பற்றி அவருடைய கருத்தைக் கேட்கையில், "என்னுடைய நாடகத்துக்கு வரவங்க எல்லாத்தையும் மறந்து சிரிக்கனும், 100 நிமிடத்தில் 200 ஜோக்குகள், அவ்வளவுதான், மத்தபடி நாடகத்தின் மூலம் பெரிய அறிவுரை எல்லாம் கொடுக்கணும்னு எண்ணமெல்லாம் இல்லை" என்று வெகு இயல்பாகச் சொல்கிறார். சொல்கிற மாதிரி செய்தும் காட்டுகிறார்.

இந்த நாடகத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், எஸ்.வி. சேகர் தவிர மற்ற அத்தனை கலைஞர்களும் சியாட்டில் வாழ் மென்பொருள் வல்லுனர்களே. சியாட்டில் தமிழ்சங்கத் தலைவர் சுஜாதா ராஜராஜன் அழைப்பின் பேரில் நாடகத்தை மேடையேற்றச் சென்ற எஸ்.வி. சேகர் நாடகத்தை வழங்கியதோடு மட்டுமல்லாமல் அங்கு கண்டெடுத்த திறமைமிக்க குழுவினருடன் பறந்து வந்து, ஜெயந்தி நடராஜன் அவர்கள் உதவியுடன் சாக்ரமென்டோவிலும், ஜோசப் செல்வராஜ் அவர்கள் உதவியுடன் சான் ஹோசேவிலும் வெற்றிகரமாக நாடகத்தை மேடை யேற்றினார். நான்கே வாரங்களில் மென்பொருள் வல்லுனர்கள் நடிகர்களாக உருமாறி மூன்று நகரங்களில் நாடகத்தை மேடையேற்றி, சபாஷ் வாங்கியுள்ளனர்.

பல கோணக் காதல் கதையை அரசியல் நையாண்டியுடன் சொல்ல முனைகிறது இந்த நாடகம். ஸ்ரீதரன் நாடகத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் போலிச் சாமியாராக நடிப்பில் கலக்கினார். வித்யா, சுவாமி, லக்ஷ்மி, தீபா, மது மற்றும் அத்தனை நடிகர்களும் தங்கள் பாத்திரங்களைத் திறம் படச் செய்தனர்.

நாடகத்தை அடுத்து நடந்த கேள்வி-பதில் நேரத்தில் எஸ்.வி. சேகரின் சமயோசிதத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு: கேள்வி கேட்க மைக்கை இழுத்த பெண்ணிடம் "ரொம்ப இழுகாதீங்கம்மா, இழுத்த இழுப்புக் கெல்லாம் வர்ரதுக்கு இது என்ன உங்க கணவரா" என்று சொல்லி அரங்கத்தையே சிரிக்க வைத்தார். அதை தொடர்ந்து "கணவன் மனைவிக்கு இடையில் ரகசியம் இருக்கலாமா? கூடாதா? " என்ற பட்டிமன்றம் வெகு சுவை..

ஜெயந்தி, குமுதா, அலெக்ஸ் ரகசியம் இருக்கலாம் என்ற அணியிலும், கந்தசாமி, கனகா, முனிஷ் ரகசியம் இருக்கக் கூடாது என்ற அணியிலும் வாதிட்டனர். ஓட்டுக்கு விட்டதில் ரகசியம் இருக்கலாம் என்பவர்களின் எண்ணிக்கையே அதிகம் இருந்ததால், "கணவன் மனைவிக்குள் ரகசியம் இருக்கலாம்" என்று தீர்ப்பை அறிவித்தார். மொத்தத்தில் அன்று இரவு ஒரு நல்ல நகைச்சுவை இரவாக அமைந்தது.

இந் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மாயா கிரியேஷன்ஸ் நிறுவனம் ஒரு ஆங்கிலக் குறும்படம் தயாரித்துக் கொண்டு இருக்கிறார்கள், இந்த படத்தயாரிப்பில் பங்கேற்க விரும்புகிறவர்கள்
© TamilOnline.com