டான்சி வழக்கில் ஜெயலலிதா விடுதலை
இந்தியாவே மிக ஆவலுடன் எதிர் பார்த்துக் காத்துகொண்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான டான்சி வழக்கின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நவம்பர் 24ம் தேதி காலை அறிவித்தது. ஜெயலலிதாவுக்கு எதிராக சட்டப்பூர்வமான ஆதாரம் ஏதும் இல்லாததால் இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பில் மாற்றம் செய்ய வேண்டியதில்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் சர்ச்சைக்குரிய நிலத்தை திரும்ப ஒப்படைக்குமாறும் ஜெயலலிதாவுக்கு உத்தரவிட்டது.

கடந்த 1991ம் ஆண்டு முதல் 96வரை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அவரும் அவரது தோழி சசிகலாவும் பங்குதாரராக இருந்த நிறுவனங்களுக்காக சென்னையிலுள்ள கிண்டி அரசு தொழிற்பேட்டையில் 'டான்சி' நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தை வாங்கினர். இதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஜெயலலிதா மற்றும் சசிகலா மீது முந்தைய திமுக ஆட்சியில் வழக்கு தொடரப்பட்டு, இவ்வழக்கு விசாரணை தனிநீதிமன்றத்தில் நடைபெற்றது.

தனிநீதிமன்றம் இந்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு மூன்றாண்டு சிறைத்தண்டனை வழங்கியது. இத்தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டு, அங்கு நீதிபதி தினகர் தனிநீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தார்.

இதன் மூலம் மீண்டும் ஜெயலிதா சட்டமன்ற உறுப்பினராக ஆண்டிப்பட்டியில் வெற்றிபெற்று மீண்டும் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். மீண்டும் இத்தீர்ப்பை எதிர்த்து திமுக பிரமுகர் ஆலந்தூர் பாரதி, ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ராஜேந்திரபாபு, வெங்கட்ராம ரெட்டி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து கடந்த செப்டம்பர் மாதம் விசாரணையை முடித்துக்கொண்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த திங்களன்று (நவம்பர் 24) அவ்வழக்கிலிருந்து ஜெயலலிதா மற்றும் அனைவரையும் விடுதலை செய்தது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com