தென்கலி·போர்னியத் தமிழரின் தீபாவளி 2003
நவம்பர் 22, 2003 அன்று மாலை கொவீனாவில் உள்ள அமெரிக்கன் மான்ட்டிஸ்ஸொரி பள்ளி அரங்கில் 'தென்கலிபோர்னியத் தமிழர்' என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. தனியே அழைப்பாளர்களுக்கு மாத்திரம் என்ற ரீதியில் அழைப்பை 125க்குக் கட்டுப்படுத்தி இருந்தனர். சரியாக 4 மணிக்கு 'மங்கல மங்கையர் மங்கள தீபம்' ஏற்றும் வைபவத்துடன் விழா ஆரம்பமானது. இதைத் தொடர்ந்து வட்டத்தின் பெண்கள் குழு தமிழ்த்தாய் வாழ்த்து இசைத்தனர். தேவாரம், ஆத்திசூடி, பாரதி பாடல், நடனம், சிற்றுரை என்ற பல்வேறு நிகழ்வுகளை, நான்கிற்கும், பதினான்கிற்கும் இடைப்பட்ட வயதிலான சிறுவர், சிறுமியர் தனியேயும் குழுவாகவும் நிகழ்த்தினர். தீபாவளி பற்றிய உரை தமிழிலும், ஆங்கிலத்திலும் வழங்கப் பட்டன. அனைத்து நிகழ்ச்சிகளும் தமிழில் நிகழ்ந்தன. தனி நடனம், குழு நடனம் என்பவற்றோடு 'ஞானப்பழம்' என்ற புராண நாடகம் பார்வையாளர்களுக்கு விருந் தானது. முப்பதுக்கும் அதிகமான சிறுவர் சிறுமியர் பல வேடங்கள் தரித்து மாறுவேடப் போட்டி நிகழ்த்தினர்.

அடுத்து 'வரும்' என்று ஒரு குறியீட்டு நாடகம் அரங்கேறியது. இலங்கையில் 90களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்திற்கும், கொழும்பிற்கும் இடையிலான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்த காலத்தில், கடல் வழிமார்க்கமாக உயிரைப் பணயம் வைத்துப் பயணித்த பல தரப்பட்ட மக்களின் ஆதங்கங்கள், உணர்வுகள், பயணம் நடுக்கடலில் தடைப்பட்ட போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், கரை சேர்வதற்கு எப்படி ஒற்றுமையாக உணர்ந்தார்கள் என்ற பல்வேறு கோணங்களுக்கு உயிர் கொடுத்தது இந்த நாடகம்.

குழந்தைகள் கூட அழ மறந்து ரசித்தனர். இதைத் தொடர்ந்து 'புலம் பெயர்ந்த நாடுகளில் எமது கலாசாரத்தைப் பின்பற்றுவது நடைமுறைக்கு சாத்தியமானதா? சாத்தியமற்றதா?' என்ற பட்டிமன்றம் நடைபெற்றது. "கடல் கடந்து வந்தாலும் எமது பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம் என்ற இவற்றின் முக்கியத்துவம், அதன் பலன்கள் வருங்கால சந்ததியினருக்குப் புகட்டப்பட வேண்டும். இதற்கு இந்த விழாவே சாட்சி. எம்மை எமது அடுத்த சந்ததியினருக்கு அறிமுகம் செய்து வைக்கும் இந்த சரித்திரக் கடமையிலிருந்து தவறுவோம் ஆகின் எமது அடையாளம் அழிந்துவிடும்" என்று அறைகூவி, 'சாத்தியம்' என்ற முடிவு வரவேற்கப்பட்டது.

இதை அடுத்து 'காதல் என்பது எதுவரை?' என்ற நாடகம். நகைச்சுவை கலந்து முதல் சந்ததியினர் வேலை, வீடு, குடும்பம் என்ற பல்வேறு நிலைப்பாடுகளிற்குள், உள்ளூர், உறவினர்களின் உதவியின்றித் தடுமாறுவதை, அன்றாட நிகழ்வுகளைக் கேலியாகச் சித்தரித்தது.

விழாக்குழுத் தலைவர் க. சிவதாசன் நன்றியுரை கூறினார். பாடசாலை முதல்வர் நொயலின் மகேந்திர ராஜா விருது வழங்கினார். இன்னிசை மாலை உள்ளூர்க் கலைஞர்களால் வழங்கப்பட்டதும் விழா நிறைவு பெற்றது.

பிரகாசம்

© TamilOnline.com