சிகாகோவில் மாவீரர் தினம்
நவம்பர் 22, 2003 அன்று ஈழத் தமிழர்களின் ஆதரவோடு சிகாகோவில் மாவீரர் தினம் கொண்டாடப்பட்டது. ஈழம் மலர்வதற்காகத் தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தியாகிகளின் நினைவாகக் கொண்டாடப்படும் இந்நாள் 'கவிக்குரலோன்' சி.எஸ். பாஸ்கரின் முயற்சியால் நடைபெற்றது. மதியம் இரண்டு மணிக்கு விளக்கேற்றி ஆரம்பித்த இவ்விழா, மாலை 6 மணி வரை கண்கவர் நிகழ்ச்சிகளைக் கொண்டு நடந்தது. சிறுவர்களின் மலரஞ்சலியும், செல்வன் நீலனின் மழலை அஞ்சலியும் கண்ணுக்கும் செவிக்கும் விருந்து. 'கல்லறைத் தொட்டிலில்' கானமும், பிரியங்காவின் 'மாவீரர் நீங்களே' நடனமும் கண்களைக் குளமாக்கின. இந்த நாளில் ஈழத்து இசைமேதை வீரமணிக்கு நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.

மறைந்த இந்த இசைக்கலைஞர் 'கற்பக வல்லி நின்' போன்ற ஏராளமான பாடல்களை எழுதியவராவார். நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பு வைத்தது போல அமைந்தது 'வெற்றிக்கொடி கட்டு' நடனம். நன்றியுரையுடன், ஈழக் கொடியிறக்கி மாவீரர் திருநாளை நிறைவு செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சி முடிந்து வெளியே வரும் போது நினைத்துப் பார்த்தால், 'இத் தமிழர்கள் நிரந்தரமான, நிம்மதியான, கெளரவமான சமாதானத்தையே விரும்புகிறார்கள்' என்று மனம் கூறியது.

ஜோலியட்ரகு

© TamilOnline.com