மிச்சிகன் தமிழ் சங்கம்: கிறிஸ்துமஸ் / இளவட்டக் குதூகலம்
டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி மிச்சிகனின் கிளாஸன் ஹை ஸ்கூலில் தமிழ் மணம் வீசியது, மிச்சிகன் தமிழ் சங்கத்தின் கிறிஸ்தும்ஸ் / இளவட்ட விழா இங்கு இனிதே நடந்தேறியது.

மாலை 5.30 மணியளவில் தொடங்கிய இவ்விழாவின் முதற்கட்டமாக ஸேண்டா (Santa) தம்பதி சமேதராக வருகைத் தந்தார்கள். தன் பல வேலைகளுக்கு நடுவே ஒரு மணி நேரத்திற்கும் மேல் அங்கு இருந்தது மட்டுமல்லாமல், அங்கிருந்த குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுக்குப் பரிசும் தந்தார். சங்க உறுப்பினர் மற்றும் பல நிர்வாகப் பொறுப்புகளை ஏற்றுள்ள திருமதி. ரேணுகா சாலக்கோடு மற்றும் அவரது கணவர் திரு. சாலக்கோடு அவர்களே இவ்வாண்டும் ஸேண்டாவாக வேடம் தரித்து குழந்தைகளை மட்டுமல்லாமல் பெரியவர் களையும் மகிழ்வித்தனர். இதில் குறிப்பிடத் தக்க மற்றொரு விஷயம், ஒவ்வொரு புகைப்படம் எடுத்த பிறகும், அந்தக் குழந்தையின் ஈ-மெயில் முகவரியை கையோடுக் கேட்டு, அதனைத் தம் லேப்-டாப்பில் பதிவு செய்தனர் நம் இளைஞர் அணியினர். புகைப்படங்கள் எடுத்ததும் அவர்களே!

மேடை நிகழ்ச்சிகள் 6.30 மணியளவில் தொடங்கின. இளைஞர்கள் சிலர் தமிழ்தாய் வாழ்த்து மற்றும் அமெரிக்க தேசிய கீதத்தைப் பாட, மரியாதையுடன் கலந்த மௌனம் நிலவியது. பிறகு இந்திய தேசிய கீதத்தைப் பாட, ஒருவித குதூகலமும் சேர்ந்து பார்வையாளர்கள் அத்தனைப் பேறும் உடன் பாடத் தொடங்கினர். தாய் மண்ணே வணக்கம்!

அடுத்து 14 குழந்தைகள் பங்கேற்ற "நேட்டிவிடி" காட்சி அரங்கேறியது. தகுந்த வேடங்கள் தரித்து மேடையேறிய இக் குழந்தைகள் தாம் மௌனம் சாதித்தே பார்வையாளர்களையும் மௌனத்தில் ஆழ்த்தினர். பத்து நிமிடங்கள் அரங்கேறிய இக்காட்சியில் பல யுகங்களின் முன் நடந்தேறிய கதையும் நிஜமும் அழகாக சித்தரிக்கப்பட்டது. பல வருடங்களாக இந்நிகழ்ச்சியை வடிவமைக்க உதவி வரும் சங்க உறுப்பினர்கள் திரு. பிரபாகரன் மற்றும் அவரது துணைவியார் திருமதி. பிரேமா பிரபாகரன் அவர்களுக்கும் சாதனங்களை அளித்து ஒப்பனையில் உதவி வரும் ஜாம்பவான் வேங்கடேசன் தம்பதியினருக்கும் எங்கள் உளமார்ந்த நன்றி.

இக்காட்சி நடந்துகொண்டிருந்த அதே சமயம் மேடையில் மிகவும் ரம்மியமான கரோல் கீதம் ஒலித்துக்கொண்டிருந்தது. கீ-போர்டில் சில சிறுவர்கள் கீதம் இசைக்க, மற்றும் சிலர் பாடல்களைப் பாட, அரை மணி நேரம் நடந்த இந்தக் கீ-போர்டு நிகழ்ச்சியின் தரம் அபாரம். நிகழ்ச்சி அமைப்பாளர் மற்றும் ஆசான் திரு.சுரேந்தர் அவர்களுக்கு எமது நன்றி கலந்த பாராட்டுக்கள்.

அடுத்து, இளைய நிலா பொழியத் தொடங்கியது - நம் தமிழ் சங்க இளைஞர் அணியின் பிரத்தியேக நிகழ்ச்சிகள் தொடங்கின. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நம் பண்பாட்டிற்கேற்ப, பிற சங்கங்களி லிருந்தும் இளைஞர்கள் வந்து இரண்டு அற்புத நடன நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். இளைஞர் அணித் தலைவர் விஷி சாந்தா பிரகாஷின் நாடகம் நன்றாக இருந்தது, அதைக் காட்டிலும் விசேஷம் இதனை வீடியோ படமாக ஒலிபரப்பிய விதம். கற்பனை ஓராயிரம்!

செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் அணியினிடையே வித்தியாசமான, சுவாரஸ்யமான போட்டி வினாடி-வினா நடந்தது. இளைஞர்களிடம் தமிழ் கலாச்சாரத்தைச் சார்ந்த கேள்விகளை அன்பர் டாக்டர் ராஜாராமன் தொடுக்க, மகன் ஆதித்யா செயற்குழுவிடம் அமெரிக்க கலாச்சாரம் சம்பந்தமான வினாக்களைத் தொடுத்தார்.

"தமிழ் அமுதம்" என்ற தமிழ் வானொலி நிகழ்ச்சியை நடத்தி வரும் திரு. பாலநேத்திரம் தம்பதியினர், தமது நிகழ்ச்சியின் 100ஆம் வாரச் சாதனைக்காக கௌரவிக்கப் பட்டார்கள்.

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த "பாட்டுக்குப் பாட்டு" நிகழ்ச்சி இறுதியில் நடைபெற்றது. நடத்துனர்களான திரு. நிரஞ்சன் ராவ் மற்றும் திரு.ரவி வேங்கடம் அவர்கள் மிகவும் வேடிக்கையாக இதனை நடத்திச் செல்ல, போட்டியாளர்கள் "சபாஷ், சரியான போட்டி" என்ற அளவிற்கு திறமையாக போட்டியிட்டுப் பாடினார்கள். நம் தமிழ் மக்களிடயே தான் எத்தனை கலைத் திறன்கள் பொதிந்துள்ளன.

மொத்தத்தில் இவ்விழா இளைஞர்களின் முத்தமிழ் விழாவாக பரிணமித்தது. வந்திருந்த அனைவரும் மனதிலும் நடையிலும் இளமைத் ததும்ப விடைப் பெற்றுச் சென்றனர்.

உஷா

© TamilOnline.com