தேர்தலுக்காக மாறும் கூட்டணிகள்!
தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக கட்சிகள் தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. ஒவ்வொன்றாக அக்கூட்டணியிலிருந்து விலகி காங்கிரஸ் அமைக்கவிருக்கும் முற்போக்குக் கூட்டணி யில் தங்களை இணைத்துக் கொண்டு, வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி வருகின்றன.

கடந்த 4 வருடங்களாக வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து இருந்த இக்கட்சிகள் இன்று 'மதச்சார்பற்ற தன்மை' என்கிற ஆயுதத்தை கையில் ஏந்தி மக்களை சந்திக்கவிருக்கின்றன.

'பொடா' வழக்கில் ம.தி.மு.க.வுக்கு ஆதரவாக பலத்த குரல் எழுப்பிவருகிற தி.மு.க.வுக்கு நன்றி செலுத்தும் வகையில் ம.தி.மு.க. மத்திய அமைச்சரவையில் இருந்து தம்மை விடுவித்துக்கொள்வதாக அறிவித்தது.

ஆனால் பா.ம.க. மட்டும் இவர்கள் போல் உடனடியாக முடிவு எடுக்காமல் குழம்பிய நிலையில் கடந்த ஜனவரி 12ம் தேதி ''வாஜ்பாய் அரசிடமிருந்து கனத்த இதயத்தோடு பிரியவில்லை; நட்புறவோடு பிரிகிறோம்" என்று கூறியே விலகிவந்தது.

தமிழ் ஆட்சிமொழி, செம்மொழியாக அறிவிப்பது, காவிரிப் பிரச்சினை, இடஒதுக்கீட்டுக்குச் சட்டப்பாதுகாப்பு போன்றவற்றில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்கிற காரணங்களையே விலகி வந்த கட்சிகள் கூறுகின்றன. ஆனால், தமிழகத்தில் கணிசமான தொகுதிகளைப் பிடிக்க வேண்டுமென்றால் சிறுபான்மையினரின் ஒட்டுகள் தேவை என்கிற கோணத்தில், இதுவரை 'மதச்சார்புள்ள' பாரதிய ஜனதாகட்சியோடு கைகோர்த்து உலா வந்த இக்கட்சிகள், இன்று 'மதச்சார்பற்ற' முற்போக்குக் கூட்டணி என்கிற புதிய அணியில் ஒன்றிணைகின்றன. காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க, பா.ம.க, மற்றும் உதிரிக் கட்சிகள் சேர்ந்தது இப்புதிய அணி.

24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தி.மு.க. காங்கிரஸ் உறவு மலர்ந்துள்ளது. ஆக, கூட்டணிகள் கொள்கை ரீதியாக உருவா கின்ற காலம் மாறி இன்று தேர்தலுக்காக உருவாகிற, சர்ந்தர்ப்பவாதக் கூட்டணி களாகிவிட்டன. இந்த கூட்டணிகள் தொகுதி உடன்பாடு என்கிற சவாலைத் தாக்குப் பிடிக்குமா?

கேடிஸ்ரீ

© TamilOnline.com