சிகாகோவில் ராகவன் மணியனின் இன்னிசை
சஞ்சய் சுப்ரமணியத்தின் இசை ஞானம், உன்னிகிருஷ்ணனின் குரல்வளம், பால முரளியின் இசை ஆர்வம் ஆகியவற்றை ஒருங்கே ஒரே இடத்தில் காணமுடியுமா? பிப்ரவரி 7ஆம் தேதி சிகாகோ ட்ரைடன் கல்லூரி அரங்கத்தில் உலகத் தமிழ்மொழி அறக்கட்டளையின் சார்பாக நடந்த ராகவன் மணியனின் இன்னிசை விருந்தைக் கேட்டவர்கள், 'முடியும்' என்று ஆணித்தரமாகச் சொல்வார்கள்.

தமிழறிஞர் ராம்மோகனின் தலைமையில் நிகழ்ந்த இந்த இசை மாலையில் சுமார் மூன்று மணிநேரம் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடினார் ராகவன்.

'அருள்புரிவாய்' என்ற ஹம்சத்வனி ராகப்பாடலுடன் தொடங்கிய நிகழ்ச்சி, அன்பைப் பற்றித் திருமூலர் அருளிய பாடலில் களைகட்டத் தொடங்கியது. நவராகவர்ணத்தில் இவர் பாடிய திருக்குறள் ஒரு புதிய முயற்சி. அடுத்து வந்த மோகனராக சிலப்பதிகாரப் பாடலும், 'ஆடலும் பாடலும் அழகு' என்ற சுத்த சாவேரிப் பாடலும் வெகுஜோர். குரு டாக்டர் பாலமுரளியைப் போலச் சொந்த சாகித்யம் இயற்றி, சித்தார்த்தம் என்ற ராகத்தில் 'மாறனை வெல்லும் வீரா' என்ற பாடலில் தன் திறனைக் காண்பித்தார்.

பின்னர் இடம்பெற்ற தேவாரப் பாடல், பாபநாசம் சிவனின் லதாங்கி ராக 'பிறவா வரம்', மகாவித்வான் அரியக்குடியின் அமிர்கல்யாணி ராக 'தூமணி மாடத்து', நாமக்கல் கவிஞரின் சவால் கீர்த்தனை, நாட்டக்குறிஞ்சியில் கம்பராமாயணப் பாடல், திருப்புகழ், நக்கீரர் அருளிய திருமுருகாற்றுப்படை எல்லாமே குற்றாலத்துச் சாரல், மனதிற்கு மிகவும் இதம்.

இன்னிசை மாலையை பாரதிதாசனின் 'தமிழுக்கு அமுதென்று' என்ற பாடலுடனும், மதுவந்தி ராகத்தில் சொந்த சாகித்யத் தில்லானாவுடன் அருமையாக நிறைவு செய்தார். இன்னும் பாடிக்கொண்டே இருக்கமாட்டாரா என்று எல்லோரையும் ஏங்க வைத்துவிட்டார். இவருக்கு ஈடுகொடுத்தவர்கள் வளர்ந்து வரும் மிருதங்கக் கலைஞர் ரவிசங்கர் மற்றும் வயலின் வித்வான் பிரசாத் ராமச்சந்திரன் ஆகியோர்.

ஜோலியட் ரகு

© TamilOnline.com