சிகாகோவில் பொங்கல் திருநாள்
ஜனவரி 24 அன்று சிகாகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. தலைவர் முத்துசாமியின் வரவேற்புரையுடன் விழா மாலை 6.15 மணிக்கு அரோரா பாலாஜி கோயில் அரங்கத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. தலைமை விருந்தினராக வந்திருந்த இந்திய தூதரக அதிகாரி அருண்குமாரை 'மெட்லைப்' இராஜகோபாலன் அறிமுகம் செய்தார். தன்னுடைய முகவுரையில் அருண்குமார் தமிழர்கள் இந்நாட்டிற்கு ஆற்றும் அரும்பணிகளையும், சென்னையில் தன் இளமைக்கால அனுபவங்களையும் நினைவு கூர்ந்தார்.

இவ்விழாவின் ஒருபகுதியை ஆதரித்த சிகாகோவாழ் தமிழ் அறிஞரும் தொழிலதி பருமான விஸ்வபாரதி அவர்கள் தன்னுடைய 'விலாஸ் டெவலப்மெண்ட் கார்ப்பரேஷன்' எப்படித் தமிழர்களுக்கு உதவிபுரிகிறது என்று விவரித்தார்.

அஸ்வின் சிவராமனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியைத் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் கடலூர் குமார் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார். அடுத்து வந்த கிருஷ் ராமச்சந்திரனின் பல்குரல் வந்திருந்தோரை வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தது. குரு வித்யா பாபுவின் இயக்கத்தில் 'செந்தமிழ்நாடு' நாட்டியமும், வினய் ஸ்ரீனிவாசனின் 'அம்மா வென்றழைக்காத' திரைப்பாடலும் பிரமிக்க வைத்தன. வெங்கட் முரளியின் 'அண்ணாமலைத் தம்பி' நடனத்தைப் பார்த்தவர்கள், தமிழகத்திலிருந்து திரைப்பட நடிகர்தான் வந்துவிட்டாரோ என்று வியந்தார்கள்.

அடுத்து வந்தது ஆனந்தி ரத்னவேலுவின் பொங்கலைப் பற்றிய கவிதை. பிரபல நடன ஆசிரியை ஷோபா நடராஜனின் மாணவிகள் ஆடிய 'கோகுலத்தின் வீதியெல்லாம்' நடனம் மிகச் சிறப்பு. லலிதா பாரதியின் 'என்ன தவம் செய்தனை' பாடலும், ஸ்வேதா சுரேஷ் மற்றும் சுதா மயிகுமார் ஆடிய திரையிசை நடனமும் வந்திருந்தோரை மெய்மறக்கச் செய்தன. மிருதங்க வித்வான் ரவிசங்கர், ஜானகியுடன் பாடிய சங்கமம் திரைப்படப் பாடல், மாலை நேரத்தை மணக்க வைத்தது.

இடைவேளையின் போது, புதிதாக ஆரம்பித்துள்ள 'ஸ்வாகத்' உணவகத்திலிருந்து வயிறு புடைக்க விருந்தளித்தார்கள் தமிழ்ச்சங்கத்தினர்.

பின்னர் நடந்த பட்டிமன்றத்தின் தலைப்பு ''தமிழ்க் கலாச்சாரத்தைப் பெரிதும் கடைப்பிடிப்பவர்கள் இந்தியாவாழ் தமிழர்களா? வெளிநாடுவாழ் தமிழர்களா?'" இந்த சூடான விவாத்தில் பங்கு பெற்ற அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினார்கள். இந்தியா வாழ் தமிழர்களே என்று தீர்ப்பளிக்கப் பெற்றாலும் இந்நிகழ்ச்சி வந்திருந்தோரின் சிந்தனையைத் தூண்டும் விதமாக அமைந்திருந்தது.

கடந்த முப்பது வருடங்களாக சிகாகோ தமிழ்ச்சங்கம், அமெரிக்கத் தமிழர்களின் கலாச்சாரத்தையும், திறமைகளையும் ஊக்குவிக்கிறது. நிகழ்ச்சிகளில் பங்கு பெறவோ அல்லது உறுப்பினர் ஆகவோ விரும்புவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண்கள்: 847.498.2152 (முத்துசாமி) 630.890.1378 (கடலூர் குமார்)

ஜோலியட் ரகு

© TamilOnline.com