மார்ச் 2004: வாசகர் கடிதம்
தென்றலில் பிறமாநிலங்களில் நடக்கும் பண்டிகைகளைப் பற்றியும் எழுதினால் வாசகர்கள் ரசிப்பார்கள். இங்குள்ள இந்திய அமெரிக்கர்கள் எந்த முறையில் நம் நாட்டுக்குச் சேவை செய்ய முடியும் என்பதையும் சுட்டிக்காட்டலாம்.

பிப்ரவரி 04 இதழ் முகப்பு அட்டை முதல் கடைசிப் பக்கம் வரை உள்ள குறிப்புகள் மிகக் கவர்ச்சிகரமாக உள்ளது. தவிர தென்றல் வலைத்தள முயற்சிகள் நடந்து வருவதாகக் கண்டேன். மிக்க மகிழ்ச்சி.

அட்லாண்டா ராஜன்

*****


தென்றலின் கடந்த 3 இதழ்களை இப்போதுதான் படித்து முடித்தேன். ஒவ்வொரு மாதமும் அதில் எத்தனை வகை விஷயங்கள் வருகின்றன என்பது வியப்பளிக்கிறது. குறிப்பாக நேர்காணல், அறிவியல் கட்டுரைகள் மற்றும் குறுக்கெழுத்துப் புதிர் என்னைக் கவர்கிறது. நல்ல பணியைத் தொடருங்கள்.

கமலா (மின்னஞ்சலில்)

*****


குடத்துக்குள் இருக்கும் விளக்குதனை வெளியே கொண்டு வருவது போன்று, ஒவ்வொரு தென்றல் இதழிலும் சாதனையாளர்களை வெளியுலகுக்குக் காட்டி தற்கால இளைய சமுதாயத்திற்கு வெற்றிப் பாதையைக் காண்பிக்கும் தங்களது அரிய முயற்சிக்குத் தமிழ்கூறும் நல்லுலகம் நன்றி பாராட்டும் என்றால் அது மிகையன்று.

காஞ்சனா ஜானு,
Rancho Palo Verdes,
கலிபோர்னியா

*****


கடந்த ஒரு வருட காலமாகத் தென்றலின் இனிமை எங்கள் இல்லத்தில் தவழ்ந்து வருகிறது. குறிப்பாக, குறுக்கெழுத்துப் புதிரை குடும்பத்துடன் அமர்ந்து போடுவதை நாங்கள் இரசித்து வருகிறோம். நாடு விட்டு நாடு வந்த போதிலும் நல்ல தரமான தமிழ்ப் பத்திரிகை படிக்கக் கிடைப்பதில் பெருத்த மகிழ்ச்சி அடைகிறோம்.

வரலட்சுமி ரஞ்சன்

*****


பருவமழை கானல்நீராக, தண்ணீர் பஞ்சம் வாட்டி வதைக்க, அலங்கோல அரசியல் மனதை வேதனைப்படுத்த, கிடப்பது கிடக்கட்டும், கட்டு மூட்டையை என்று விமானமேறிப் பயணித்து, பசிபிக் கடல் தாண்டி, பசுமையான அமெரிக்கா வந்து சற்று களைப்பாறிய பிறகு எழுதும் முதல் கடிதம் தென்றலுக்கே.

சுவை குன்றா அறிவு மலராக, பெருகும் வாசகர்களின் மனதில் என்றும் நிறைந்து நிற்பது 'தென்றல்' என்றால் அது பொய்யான வார்த்தையல்ல. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

இந்திரா காசிநாதன்

*****


கடந்த ஒரு வருடமாக, ப்ரீமாண்டில் உள்ள பாரதி கலாலயத்திலிருந்து, ஒவ்வொரு மாதமும், என் பேத்தியை தென்றல் இதழை எடுத்து வரச்சொல்லி, படித்து மகிழ்கிறேன். அதில் என் இளமைப் பருவ எழுத்தாளர்கள் பற்றியும், அவர்களின் ஒரு சிறுகதைப் படைப்பையும் படிக்கும்போது, இப்போது அதே கதைகள் ஒரு புதிய கோணத்தில் தெரிகின்றன. அந்த நாளில் வெறும் எழுத்து வடிவமாக இருந்தவை இப்போது அர்த்தமுள்ளதாக தெரிகின்றன.

தவிர, திரு. வாஞ்சிநாதன் அவர்களின் குறுக்கெழுத்துப் புதிர், முதலில் புரியாத புதிராக இருந்தது. அதையே சாவலாக எடுத்துக் கொண்டு விடாமுயற்சியில் ஈடுபட்டேன். கடந்த இருமாதங்களாக அவர் தந்த சில குறிப்புகளின் உதவியால், முன்னேறி, பிப்ரவரி மாத புதிரை முழுமையாகத் தீர்வு கண்டு, விடைகளுடன் ஒப்பிட்டு, அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன். இந்த வெற்றி திரு. வாஞ்சிநாதனுக்கான வெற்றி என்றே சொல்வேன்.

அம்பா ராகவன்,
சாரடோகா

*****

© TamilOnline.com