தனிமை
வெட்டவெட்ட
வளரும் நகம்போல
நினைவுகள்!

கண்ணீரை மறைத்து
கடல் கடந்து வந்து
கண்காணா தேசத்தில்
கலங்கி நிற்கையிலே
அன்போடு அணைத்து
ஆறுதல் சொல்லித் தேற்ற
ஒரு மடி கிடைக்காதா என்று
ஏங்கித் தவிக்குது மனது!

இன்பத் தருணங்களின்
இனிமையான அசைவுகளை
வானவில்லின் வர்ணம் கொண்டு
வரையத்தான் நினைத்து
வட்டத்துள் சிக்கிய எறும்பாய்
வெளிவர வழி தெரியாமல்
மாட்டிக்கொள்ளுது மனது!

உண்மையில்...
மனதென்ற ஒன்றைத்
தொலைத்துவிட்டால்
இந்தத் தனிமையும் சுகமே!

தீனா

© TamilOnline.com