ம.தி.மு.கவில் சலசலப்பு!
முல்லை பெரியாறு அணை பிரச்சினைத் தொடர்பாக ம.தி.மு.க பொது செயலர் வைகோ நடைப்பயணம் மேற்கொண்டிருந்த வேளையில், ம.தி.மு.க மக்களவை உறுப்பினர் எல்.கணேசன் கட்சியின்
பொதுசெயலர் வைகோ மீது கடுமையான குற்றம்சாட்டுகளை அள்ளி வீசியது ம.தி.மு.கவின் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக் குழு, ஆட்சி மன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு ஆகிவற்றின் உறுப்பினர்கள் மற்றும் இதர முக்கிய நிர்வாகிகள் அடங்கிய

கூட்டத்தை சென்னையிலுள்ள ம.தி.மு.கவின் தலைமை அலுவலகமான 'தாயகத்தில்' கூட்டுவதாக அறிவித்தார் வைகோ.

நாங்கள் தான் உண்மையான ம.தி.மு.க என்றும் நடைபெறவிருக்கும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று அதிரடியாக எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும்

பத்திரிகையாளர் களிடையே அறிவித்தனர்.

இந்நிலையில் தனது நடைப்பயணத்தை முடித்துக் கொண்ட வைகோ, தேனி மாவட்டம் கம்பத்தில் அவசரஅவசரமாக ம.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, அரசியல் ஆய்வு

மையம், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்களின் கூட்டத்தை கூட்டி, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் எல். கணேசன் ம.தி.மு.கவின் அவைத் தலைவர் பொறுப்பிலிருந்தும், செஞ்சி

ராமச்சந்திரன் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கினார்.

ஆனால் தன்னை பொறுப்புக்களிலிருந்து நீக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கே உண்டு என்று கூறிய எல். கணேசன் இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுகப்போவதாக கூறினார். இதனைத் தொடர்ந்து

சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் எல்.கணேசன் மற்றும் செஞ்சி ராமச்சந்திரன் நீக்கத்துக்குத் தடைவிதித்தது.

'ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டத்தில் கலவரம் விளைவிக்க தி.மு.க திட்டமிட்டிருக்கிறது என்று குற்றம் சாட்டிய வைகோ இதுதொடர்பாக கடிதம் ஒன்றை பிரதமர் மன் மோகன்சிங்கிற்கும், காங்கிரஸ்
தலைவி சோனியா காந்திக்கும் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இத்தகைய சூழலில் ம.தி.மு.க நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் ம.தி.மு.க தலைமை அலுவலகமான 'தாயகத்தில்' கட்சியின் பொதுச்செயலர் வைகோ தலைமையில் கூடியது.

கூட்டத்தில் ஏற்கெனவே கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க வலியுறுத்தும் தீர்மானம்
கொண்டு வரப்பட்டது.

மொத்தம் உள்ள 36 மாவட்ட செயலாளர்களில் 33 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வைகோவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். நீலகிரி மாவட்ட செயலாளர் நஞ்சன் அமெரிக்கா
சென்றுள்ளதாலும், கோவை புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.டி. மாரியப்பன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாலும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை

என்றாலும் தங்களது ஆதரவை வைகோவிற்கு தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com