மெம்பிஸ்
ஏப்ரல் 17, 2004 அன்று டென்னசி மாநிலம், மெம்பிஸ் நகரத்தில் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. டென்னசியின் தலை நகரமான நேஷ்வில்லிலிருந்து 200 மைல் தொலைவிலிருக்கும் இந்த ஊரில் சுமார் 200 தமிழ்க் குடும்பங்கள் உள்ளன.

இங்கு முதல்முறையாக நடக்கும் இந் நிகழ்ச்சி, தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. ''பிருந்தாவனமும் நந்த குமாரனும் யாவருக்கும்..'' என்ற பாடலுக்கு சிறுவர் சிறுமியர் ஆடிய கோலாட்டம் அனைவரின் மனதைக் கவர்ந்தது. விநாயகர் பாடலுக்கு பரதம் ஆடியவர் அசத்தினார். பாரதியார், எம்.ஜி.ஆர், கண்ணகி போன்று மாறுவேடம் அணிந்து வந்து குழந்தைகள் திறமையை வெளிக் காட்டினர்.

இத்துடன் 'குழந்தைகளை அமெரிக்கக் கலாசாரத்தில் வளர்ப்பது சிறந்ததா? இந்திய கலாசாரத்தில் வளர்ப்பது நல்லதா?' என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றம் சுவையான பல சிந்தனைகளை முன்வைத்தது. பழைய மற்றும் புதிய தமிழ்ப் பாடல்கள், நாட்டுப்புற பாடலுக்கு நடனம் ஆகியவை சிறப்பாக இருந்தன.

அனைவரையும் வயிறு குலுங்கச் சிரிக்க வைத்தது 'நகைச்சுவை நேரம்'. வாத்தியக் குழுவுடன் பாடிய இசைக்குழுவினரின் 'தமிழா, தமிழா' மற்றும் 'தங்கமே தமிழுக் கில்லை தட்டுப்பாடு' ஆகிய பாடல்கள் கரகோஷத்தை அள்ளின.

உஷா ஸ்ரீதர்

© TamilOnline.com