இலக்கியவாதிகள் சினிமாவை ஒதுக்கிவிடுகின்றனர்
தமிழ் சினிமாவுக்கும் இலக்கியத்துக்கும் உள்ள உறவு துண்டிக்கப்பட்டுள்ளது. இதே கருத்தைத்தான் 23 ஆண்டுகளுக்க முன்கூட ஓரிடத்தில் நான் தெரிவித்தேன். அதையே மீண்டும் பேசுகிறேன் என்றால் இதற்காக நான் ஒன்றும் முயற்சி செய்யவில்லை என்றுதான் அர்த்தம். இலக்கியவாதிகள் சினிமாவை ஒதுக்கிவிடுகின்றனர். அப்படிச் செய்யக்கூடாது. கல்கி, புதுமைப்பித்தன் போன்ற இலக்கியவாதிகள் சினிமாவிலும் எழுதியிருக்கிறார்கள். சினிமாவிலுள்ள கெட்ட விஷயங்களை கெட்ட சினிமாவை மக்கள் நிராகரிக்க வேண்டும். அப்போதுதான் அதை எடுக்கக்கூடாது என்ற எண்ணம் சினிமாக்காரர்களுக்கு வரும். அத்தகைய படங்களைப் பார்க்க தியேட்டருக்கே செல்லாதீர்கள்.

கமல்ஹாசன், சென்னையில் கலாசார அகாதெமியின் பொன்விழாவில் 'சமூகத்தில் திரைப்படங்களின் பங்கு' என்ற தலைப்பில் பேசியது...

*****


பெண்ணாகப் பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன். இது ஆண்களின் உலகம் என்று பலரும் நினைக் கின்றனர்.அது தவறு. புதுமையான முறையில் சாதனை படைப்பவர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அதை உலகம் வரவேற்கும்.

தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இன்போஸிஸ் நிறுவனம் 1 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. அதுபோல் உங்கள் நிறுவனம் எப்போது சாதனை படைக்கும் என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர். சர்வதேசச் சந்தையில் எங்கள் நிறுவனம் பேசப்படுவதே போட்டிக்கு நாங்கள் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்கின்றது.

கிரண் மஜும்தார் ஷா, இந்தியாவின் மிகப்பெரும் பெண்செல்வந்தர், தொழில் அதிபர் தனது நிறுவனத்தின் வளர்ச்சி பற்றி நிருபர்களிடம் பேசியதிலிருந்து...

*****


சமீபத்திய கணக்கெடுப்புப்படி, சுயதொழில் பயிற்சி எடுத்த மூன்று லட்சம் பெண்களில் 65% பேர் ஏதாவதொரு தொழிலைத் தொடங்கிச் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டனர். தங்கள் கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பெண்களே முன்னின்று நிறைவேற்றித் தருகின்றனர். இன்னும் என்ன வேண்டும்?

தங்களுக்கு இப்படியொரு திட்டம் இல்லையே என்று ஆண்களும் ஆர்வம் காட்ட, ஒரு சில இடங்களில் ஆண்களுக்கும்கூட குழுக்கள் உருவாகி இருக்கின்றன. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பெண்கள் அளவுக்கு ஆண்கள் சின்ஸியராக இல்லை. வெற்றிலைபாக்கு, சினிமா செலவுகளை பெண்கள் சேமிப்பாக மாற்றிவிட்டனர். சிகரெட், மதுப்பழக்கங்களை விடமுடியா ததும் வாங்கிய கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தமுடியாததும் கிராமப்புற ஆண்களின் பலவீனமாக இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.

சி.கே. கரியாலி ஐ.ஏ.எஸ்., சமூகநலத்துறையின் செயலாளராகவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக்கழகத்தின் நிர்வாக இயக்குநருமான மகளிர் சுய உதவிக் குழுக்கள் பற்றிய பேட்டி ஒன்றில்...

*****


1980-ல் நாங்கள் தயாரித்த 'புன்னமி நாகு' தெலுங்குப் படம் பரிசீலனைக் குழுவுக்குச் சென்றது. நானோ, ரிலீஸ¤க்கு நாள் குறித்து விட்டேன். உறுப்பினர் கி.வா.ஜ. உடல்சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தார். இன்னொரு உறுப்பினர் ஊரிலேயே இல்லை. மூன்றாவது உறுப்பினர் நாகிரெட்டியார், தன் மூத்த மகன் பிரசாத்தை இழந்து நாலைந்து நாட்கள்கூட ஆகவில்லை. இருந்தும், தன் சொந்தத் துக்கங்களையும் மீறித் தானே சென்ஸாருக்காகப் படத்தைப் பார்க்க அவர் முன்வந்த தகவல் தெரிந்ததும், நான் பதறிப்போனேன். 'நீ கஷ்டப்படும்போது சும்மாயிருக்கமுடியுமா?' என்று சொல்லிப் படத்தை வெளியிட அனுமதி கொடுத்தார். அவ்வளவு பெரிய துக்கத்திலும் அடுத்தவருக்கு உதவுகிற பெரிய மனது அவருடையது.

ஏ.வி.எம். சரவணன், நாகிரெட்டி பற்றி நினைவுகூறுகையில்...

*****


தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய போது, என்னுடைய எதிர்பார்ப்பு களுக்கேற்ப நான் விளையாடவில்லை. மிகுந்த குழப்பத்தில் இருந்தேன். ஆனால் பின்வரிசை ஆட்டக்காரராகக் களமிறங்கிய போது எனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. கடந்த உலகக் கோப்பை போட்டிக்கான அணியில் நான் சேர்க்கப்படவில்லை. அது எனக்கு மிகுந்த கஷ்டமான காலம். எனக்குள்ளே மிகுந்த எதிர்மறைச் சிந்தனைகள் ஏற்பட்டன. அப்போது எனது உறவினருடன் பேசினேன். எனது ஆட்டத்தைப் பற்றி மற்றவர்களைவிட அவர் நன்றாக அறிந்தவர். எனது குறைகளை அலசியவர். எப்படி அதிலிருந்து மீண்டு வரலாம் எனவும் ஆலோசனை கூறினார். அச்சமயங்களில் எனது பள்ளி நண்பர்களுடன் நான் நேரத்தைச் செலவழித்தேன். அவர்கள் எனது மனவலிமையை அதிகரிக்கச் செய்தனர்.

வி.வி.எஸ். லக்ஷ்மண், கிரிக்கெட் வீரர், பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில்...

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com