கத்தரிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்

துண்டங்களாக நறுக்கிய கத்தரிக்காய் -2 கிண்ணம்
பாசுமதி அரிசி கொண்டு சமைத்த சாதம் -2 கிண்ணம் (உதிர் உதிராக)
வறுத்த வேர்க்கடலை -1/4 கிண்ணம்
நெய் -1 மேசைக்கரண்டி
கடலைப் பருப்பு -2 மேசைக்கரண்டி
கொத்துமல்லி விதை -1 தேக்கரண்டி
புதியதாக துறுவிய தேங்காய் துறுவல் - 1/8 கிண்ணம்
காய்ந்த சிவப்பு மிளகாய் -5
இலவங்க பட்டை -1/2" துண்டம்
மிளகு -5
ஏலக்காய் -1
கிராம்பு -1
சோம்பு(பெருஞ்சீரகம்) -1 தேக்கரண்டி
மாங்காய்ப் பொடி -1/4 தேக்கரண்டி (இந்தியன் கடைகளில் கிடைக்கும்)
கறிவேப்பிலை -சிறிதளவு

செய்முறை

அடி கனமான ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்த்ததும், கடலைப் பருப்பு, கொத்துமல்லி விதை, காய்ந்த சிவப்பு மிளகாய், சீரகம், இலவங்கப் பட்டை, மிளகு, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, தேங்காய்த் துருவல் போட்டு வறுக்கவும். இது ஆறிய பின்பு, மிக்ஸியில் தண்ணீர் விடாமல் பொடி செய்து கொள்ளவும்.

வாணலியில் சிறிது நெய்விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்துக்கொண்டு, கத்தரிக்காய்த் துண்டங்களைப் போட்டு வேகவிடவும். உப்பு, மஞ்சள் பொடி சேர்க்கவும். காய் குழைந்து விடக்கூடாது. தயார் செய்து வைத்துள்ள மசாலாத் தூளைச் சேர்த்துக் கலக்கவும்.

அடுப்பிலிருந்து இறக்கி ஆம்சூர் (மாங்காய்ப்பொடி) போட்டுக் கலக்கவும். உதிர் உதிராக உள்ள சூடான சாதத்தில் இந்த கத்தரிக்காய்க் கலவையைப் போட்டு, தேவையான உப்பு, வறுத்த வேர்க்கடலை போட்டு நன்றாகக் கலக்கவும். கறிவேப்பிலை தாளித்துக்கொட்டவும்

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com