ஸ்ரீலதா சுரேஷின் சாங்க்யா-எண்களும் படைப்பும்
சிவா முருகன் ஆலயமும், 'விஸ்வசாந்தி'யும் இணைந்து 'சாங்க்யா - எண்களும் படைப்பும்' என்ற கருத்திலான நடன நிகழ்ச்சியை ஸ்ரீலதா சுரேஷ் அவர்களின் புதிய முயற்சியை வழங்குகின்றனர். சங்கியை என்றால் எண்ணிக்கை. இத் தத்துவத்திற்கும் சிந்தையின் பரிணாமத்திற்கும் உள்ள தொடர்பை பரதநாட்டியத்தின் மூலம் ஆராய முற்படுகிறது இக் கலைப்படைப்பு.

'வேற்றுமையில் ஒற்றுமை' என்பது சாங்க்யா தரும் செய்தி. இது இங்கு வாழ்பவர்க்கு மிகப் பொருந்துவது. மதம், கலாச்சாரம் ஆகிய வரையறைகளைக் கடந்த ஒருமையை வலியுறுத்துகிறது சாங்க்யா. ஒரே பிரபஞ்சத் தில் மூன்று குணங்கள், பஞ்சபூதங்கள், எண்குணங்கள், நவரசங்கள் என்று விரியும் இலக்கத் தத்துவமே சாங்க்யா. பிரபஞ்சம் மற்றும் படைப்பின் அஸ்திவாரத்தை விளங்கிக்கொள்ள இது உதவுகிறது.

நிகழ்ச்சி 1-இல் இருந்து தொடங்கி 10-வரை விரித்துப் பின் மீண்டும் ஒன்றில் சென்று முழுமையடையும். ஒவ்வொரு உருப்படியும் வருமுன்னர் அதன் உள்ளடக்கம் தெளிவாக விளக்கப்படும். இது அந்த உருப்படியைப் புரிந்துகொள்வதை எல்லோருக்கும் எளிதாக்கும்.

புதுமையான கருத்துருவாக்கமும், அழகிய நடனக் கோர்வையும்தான் இதன் சிறப்புகள். பஞ்சபூதங்களை விளக்கும் வர்ணம் சிறப்பாக இதற்கெனவே இயற்றப்பட்டு, 10 ராகங்களில் 10 ஜதிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குரு V. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சாதனைப் படைப்பு என்றுகூடச் சொல்லலாம் என்கிறார் ஸ்ரீலதா. இசை, தாளம், அழகுணர்வு, யோகம், வழிபாடு, நோய்தீர்த்தல், சிற்பம், கவிதை, ஒத்திசைவு என்ற அங்கங்களின் அற்புதக் கலவை இப்படைப்பு.

இது ஸ்ரீலதாவின் தனி நாட்டிய நிகழ்ச்சி, ஆனால் வெவ்வேறு பாத்திரத் தோற்றங் களோடு வருவார். இதில் குரு டெல்லி V. கிருஷ்ணமூர்த்தி (குரலிசை, நட்டுவாங்கம்), என். நாராயண் (மிருதங்கம்), சாந்தி நாராயண் (வயலின்), ரஞ்சனி நரசிம்மன் (புல்லாங்குழல்) ஆகியோர் பின்னணி தருவர்.

'விஸ்வசாந்தி' என்றால் பிரபஞ்ச அமைதி என்று பொருள். இந்த லட்சியத்தை நாட்டியம், யோகம் மற்றும் ஒத்த கலைகளின் வழியே சாதிக்கமுயல்வது விஸ்வசாந்தியின் செயல்முறை. மனிதர்கள் தம்முள் இருக்கும் தெய்வசக்தியுடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள மூன்று வழிமுறை களைக் கடைப்பிடிக்கிறது விஸ்வசாந்தி.

1. புனிதக் கலைகள்: பாரம்பரியக் கலைகளின் புனிதத்துவத்தை மீட்டுத் தருவதன் மூலம்

2. கலைகளின் ஆன்மீக அம்சத்தை உணர்ந்த ஒரு புதிய ரசிகர் குழாத்தை உண்டாக்குவதன் மூலம்

3. கலைகளின் இன்பத்தை உணர்ந்த தனிமனிதர்கள் தம்முள்ளே ஆனந்த ஊற்றைக் கண்டெடுத்துத் தமது புதிய பிம்பத்தைப் பிறருக்கு இனங்காட்டுவதற்காக.

இந்த நிகழ்ச்சியின் வருமானம் சிவா முருகன் ஆலயநிதிக்குச் சேரும்.
நேரம்: ஜூலை 11, 2004.
மாலை 4.00 மணி.
இடம்: CET, 701 Vine Street, San Jose
சீட்டுகள் வாங்க:
Vishwa Shanthi: 650.248.3269
Kausalya Hart:: 510.525.1793
Shoba G: 408.777.8412
இணையத்தின் மூலம் வாங்க:
http://www.sulekha.com/event/eventdisplay.asp?nma=SFO&cid=48524

மேலும் தகவலுக்கு: www.vishwashanthi.org
குரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் நடத்தும் மேல்நிலை மாணவர்களுக்கான பயிலரங்கத்தில் பங்குகொள்ள: shreelata@shreelatasuresh.com

© TamilOnline.com