இன்னும் சாத வகைகள்....
சாதத்தை எத்தனை வகைகளில் தயாரிக்கலாம் என்பதற்கு வரம்பு உங்கள் கற்பனைதான். சென்ற இதழில் தொடங்கியது, இங்கே தொடர்கிறது:

பட்டாணி சாதம்

தேவையான பொருட்கள்

பாசுமதி அரிசி - 1 கிண்ணம்
பச்சைப் பட்டாணி (குளிர்ப்படுத்தியது) - 1/2 கிண்ணம்
வெள்ளை வெங்காயம் (பொடியாக நறுக்கியது- 1 கிண்ணம்
பூண்டு பற்கள் - 4
இலவங்கப் பட்டை - 1/2" துண்டு
பச்சை மிளகாய் - 3
வெண்ணெய் அல்லது நெய் - 1 மேசைக்கரண்டி
பிரிஞ்சி இலை (bayleaf) - 1
கொத்துமல்லி இலை - 1/2 கைப்பிடி
ஏலக்காய் - 1
கிராம்பு - 1
சோம்பு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லித்தழை இவற்றை மிக்ஸியில் அரைக்கவும். ஒரு ஒட்டாத (நான்-ஸ்டிக்) பாத்திரத்தில் நெய்விட்டுக் காய்ந்ததும், இலவங்கப் பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, பிரிஞ்சி இலை, பூண்டு போட்டு சற்று வறுபட்டதும், அரைத்த விழுதை போட்டு நன்றாகப் பச்சை வாசனை போகும் வரை வறுக்கவும்.

பின்னர் 2 1/2 கிண்ணம் தண்ணீர் விட்டு, உப்புப் போட்டு, நன்றாகக் கொதித்ததும் அரிசியைப் போட்டு நன்றாகக் கலந்து கொதிக்கவிடவும். இரண்டு நிமிடங்கள் கொதித்த பின்னர் பட்டாணியைப் போட்டுக் கலந்து அடுப்பைச் சிறியதாக எரியவிட்டு ஒரு தட்டால் மூடி வைக்கவும். அவ்வப்போது லேசாகக் கீழ் மேலாகக் கிளறவும்.

அரிசி நன்றாக வெந்து பாத்திரத்தின் அடியில் நீர் இன்றி வற்றிப் பொலபொல என வந்ததும் இறக்கவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com