'சூப்பர் டா' படப்பாடலுக்குத் தடை!
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ராம்கி 'சூப்பர் டா' படத்தில் படத்தில் நடிக்கவிருக்கிறார். முதலில் இந்தப் படத்தில் சத்யராஜ்தான் கதாநாயகனாக நடிக்கவிருந்தார். ஆனால் சில எதிர்பாராத காரணங்களால் ராம்கிக்கு அடித்தது யோகம். நீண்ட இடைவேளைக்குப் பிறகு தமிழ்த் திரைப்பட உலகில் மீண்டும் அடுத்த சுற்றுக்காக, ராம்கி படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். ராம்கியுடன் குணால் மற்றும் அனு நடிக்கிறார்கள். படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

கவிஞர் தொல்காப்பியன் எழுதி, தேவா இசையமைத்துள்ள ஒரு பாடலின் சில வரிகள் நகரத்தார் சமூகத்தினரைக் கோபம் கொள்ள வைத்துள்ளது. சமீபத்தில் இச்சங்கத்தினர் கோவையில் அவசரக் கூட்டம் நடத்தி இப்பாடலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்தப் பாடலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனப் படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்குக் கோரிக்கை விட்டுள்ளனர்.

இதற்கிடையில் கோவை மூன்றாவது சார்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் லட்சுமணன், மணிகண்டன் ஆகியோர் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில், 'எனக்கு நாலு பொண்டாட்டி' என்று வரும் பாடல் நகரத்தார் சமூகத்தினரைக் களங்கப்படுத்துகிறது. நகரத்தார் சமூகம் மட்டுமல்ல, இந்த பாடலில் பல்வேறு சமூகத்தினரையும் களங்கப்படுத்தியுள்ளனர். எனவே, இப்பாடலை படத்திலிருந்து நீக்கி வெளியிட வேண்டும் என அதில் கூறப்பட்டிருக்கிறது.

மனுவை விசாரித்த நீதிபதி சீனிவாசன் குறிப்பிட்ட சமூகத்தினரை அதிருப்திக்கு ஆளாக்கியிருக்கும் இப்பாடலை நீக்கிய பின்னரே படத்தைத் திரையிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com