குழந்தை கவிஞரின் பிறந்த நாள் விழாவும் இணையதள துவக்கமும்
குழந்தை கவிஞர் அழ.வள்ளியப்பா அவர்களின் 85வது பிறந்த நாள் தினவிழா, குழந்தை இலக்கிய விழாவாக, காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலைக்கழக கலையரங்கத்தில் கடந்த நவம்பர் 7ம் தேதி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவிற்கு தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் இந்திய அஞ்சல்துறை, குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களைக் கெளரவிக்கும் வகையில் சிறப்பு உறை ஒன்றை வெளியிட ஏற்பாடு செய்திருந்தது சிறப்பு. மதுரையில் உள்ள தென்மண்டல அஞ்சல்துறை இயக்குநர் திரு. க. பாலசுப்பிரமணியன் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட, தவத்திரு. குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பெற்றுக் கொண்டார்.

அஞ்சல் உறையை பெற்றுக் கொண்ட பொன்னம்பல அடிகளார் குழந்தைகளுக் காகவே வாழ்ந்த கவிஞர் அழ. வள்ளியப்பா என்று அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும் அழ. வள்ளியப்பா பற்றி
பேசுகையில், ''அன்பைத்தேடி தவிக்கும் உள்ளம் குழந்தை உள்ளம். அது தெய்வ உள்ளம். அந்தவகையில் குழந்தை உள்ளம் கொண்ட அற்புதமான குழந்தைக் கவிஞர்தான் அழ. வள்ளியப்பா..'' என்றார்.

விழாவில் ஜெயந்தி நாகராஜன் எழுதிய 'குழந்தை கவிஞர் அழ. வள்ளியப்பா' எனும் நூலை கவிஞர் செல்வ கணபதி வெளியிட, நூலின் முதல்பிரதியை குழந்தை இலக்கிய ஆர்வலம் பி.வெங்கட்ராமன் பெற்றுக் கொண்டார்.

அன்றைய நிகழ்ச்சியின் முக்கிய அம்சமான கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களைப் பற்றிய இணையதள பக்கத்தை (http://www.geocities. com/alvalliappa) காரைக்குடி தொழில் வணிக கழகத் தலைவரும், குருதிக் கொடை வள்ளலுமான முத்து பழநியப்பன் தொடக்கி வைத்தார்.

அடுத்த நிகழ்ச்சியாக பிரபல ஓவியர் மாருதியின் கைவண்ணத்தில் உருவான குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்களின் திருவுருவப் படத்தை குழந்தை எழுத்தாளர் டாக்டர் பூவண்ணன் அவர்கள் திறந்து வைத்தார்கள். விழாவில் பேசிய டாக்டர் பூவண்ணன், பல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கி ஆதரித்தவர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா என்றும் 1944-1954 ஆண்டுகளில் ஒரே சமயத்தில் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த 'சங்கு, 'டமாரம்', 'பாலர் மலர்' ஆகிய பத்திரிகைகளுக்கு கெளரவ ஆசிரியராக இருந்து பெருந்தொண்டாற்றியதையும் குறிப்பிட்டார்.

குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ வேண்டும் என்ற குழந்தைக் கவிஞர் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், இவ்விழாவின் தொடர்ச்சியாக குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இக்கலை நிகழ்ச்சிகளில் அழகப்பா மாண்டிஸோரி பள்ளி, அழகப்பா ஆயத்த பள்ளி, அழகப்பா மெட்ரிகுலேஷன் பள்ளி, மீனா நினைவு பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பங்கு பெற்றனர்.

காசி ஸ்ரீ அரு. சோமசுந்தரம் கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து, பள்ளிகளுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார். கலை நிகழ்ச்சிகளை, திரு. பால நடராஜன் தொகுத்து வழங்கினார். குழந்தை கவிஞரின் பேத்தி செல்வி சிந்து, பேரன் செல்வன் அருண் ஆகியோர் மேடை நிர்வாகத்தை சிறப்பாக நடத்தியது பெரிதும் குறிப்பிடத்தக்கது. முன்னதாக குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் மகன் திரு. வ.அழகப்பன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். கவிஞரின் மகள் திருமதி தேவி நாச்சியப்பன் விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூற அன்றைய விழா இனிதாக முடிவடைந்தது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com