அட்லாண்டா, ஜியார்ஜியாவில் புதிய இந்து கோவில்
ஜியார்ஜியா மாநிலம் நார்கிராஸ் என்னு மிடத்தில் ஹிந்து டெம்பிள் ஆப் ஜியார்ஜியா என்ற பெயரில் ஒரு புதிய இந்து கோவில் ஆகஸ்ட் 27, 2006 அன்று திறக்கப்பட்டது. இக்கோயிலை நிறுவியவர் ஸ்ரீஸ்ரீ செல்வம் சித்தர் ஆவார். அமெரிக்காவில் வாழும் பெரும் பாலான இந்தியர்களால் டாக்டர் கமாண்டர் செல்வம் என அழைக்கப்படும் இவர் தனி மனிதராக US $22 மில்லியன் இக்கோவில் திருப்பணிக்காக அளித்துள்ளார்.

இத்திருக்கோவிலின் குடமுழுக்கு விழா வேத சாஸ்திரப்படி ஆகஸ்ட் 25, 2006 அன்று ஆரம்பித்தது. ஹோமங்கள் முடிந்தவுடன் ஆகஸ்ட் 27, 2006 அன்று சிலைகள் எல்லாம் பிரதிஷ்டை செய்யப்பட்டன. குடமுழுக்கு நடந்த மூன்று நாட்களில் வேதபாராயணம், இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முதல் கட்டமாக விநாயகர், வள்ளி தேவ சேனையுடன் முருகர், பாலாஜி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் சத்திய நாராயணர், ஐயப்பன், 16 ருத்ரர்கள், சிவன், பார்வதி, துர்கா மாதாஜி, பஞ்சமுக ஆஞ்சநேயர், ராமர் பரிவாரங்கள், சந்தோஷ மாதா ஆகிய சன்னதிகள் திறக்கப் பட்டன. குருக்கள் திரு. எல்.வி.ஷர்மா, திரு. உமாபதி சிவாச்சாரியார், திரு. செந்தில் சிவாச்சாரியார் மற்றும் ஸ்வாமிஜி சிவசாமி ஆகியோர் அனைத்து வேத மந்திரங்களையும் ஓதினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விரைவில் தொடங்கப்படும் இரண்டாம் கட்டப் பணியில் 108 சிவ உற்சவ மூர்த்திகள் பிரதிஷ்டை செய்யப்படும். அப்போது உலகத்திலேயே 108 சிவ உற்சவ மூர்த்திகளை கொண்ட முதல் சிவன் கோவில், இக் கோவிலாகத்தான் இருக்கும்.

© TamilOnline.com