சென்னைக்கு வந்தது வீராணம்
கடந்த மூன்று வருடங்களாக பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் மற்றும் போரூர் ஏரிகள் வறண்டு போனதையடுத்து சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்காக மாநில அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

2001ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, முன்பு தி.மு.க. ஆட்சியில் ஆரம்பித்துக் கைவிடப்பட்ட வீராணம் திட்டத்தை மறுபடியும் 'புதிய வீராணத்திட்டம்' என்று பெயரிட்டு கையிலெடுத்துக் கொண்டது. 700 கோடிக்கு மேல் செலவு செய்து முடிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தமிழகத்தில் பெய்துவரும் தென்மேற்குப் பருவமழை காரணமாக வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதுவரை பண்ருட்டி, நெய்வேலி போன்ற இடங்களில் உள்ள ஊற்றுப்படுகைகளில் ஆழ்துளைக் கிணறுகளின் மூலம் சென்னை நகரின் குடிநீர் தேவையை ஓரளவுக்கு சமாளித்து வந்தது அரசு. இனி ஒருநாள் விட்டு ஒருநாள் குழாய்கள் மூலம் நேரிடையாகக் குடிநீர் கிடைக்கும் என்று அறிவித்தது. சுமார் ஒன்பதரை மாதங்களுக்குப் பிறகு குழாய்களின் மூலம் சென்னை நகரில் குடிநீர் வழங்கப்படுகிறது.

வீராணம் நீர் வழங்குவது சென்னைக்கு நிரந்தரத் தீர்வாகாது என்று டாக்டர் ராமதாஸ் கூறினாலும், ''சென்னையில் ஏற்படக்கூடிய பூதாகரமான தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க உடனே கூடுதலாக ஒரு நீர் ஆதாரம் தேவை என்பதை நான் முன்பே உணர்ந்து அதன் அடிப்படையில் 2003 பிப்ரவரியில் புதிய வீராணம் திட்டப் பணிகளை துவக்கினேன்'' என்கிறார் ஜெயலலிதா "வீராணம் திட்டமும், வீரப்பன் மரணமும் எனது ஆட்சியின் இரண்டு பெரும் சாதனைகள்" என்றும் அவர் சொல்கிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com