வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சிறுவர் தின விழா
2006 சனிக்கிழமை நவம்பர் 18, 2006 கார்த்திகைத் திங்கள் 2ஆம் நாள் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றத்தின் சார்பில் 2006 ஆம் ஆண்டின் சிறுவர் தின விழா CET அரங்கம், சான் ஓசே நகரத்தில் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் மன்றத்தின் செயலாளரும் இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப் பாளருமான திரு. டில்லி துரை அவர்கள் அனைவரையும் வரவேற்றார். சிறுவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்தை தொடர்ந்து நிகழ்ச்சி யின் முதல் பாதியை செல்வன் அறிவன் தில்லைகுமரன் மற்றும் செல்வி ஹன்சா குமரப்பன் தொகுத்து அளித்தனர். பின் பாதியை செல்வன் பரத் ராமச்சந்திரன் மற்றும் செல்வி அம்லு நடேசன் தொகுத்து அளித்தனர். இவர்கள் தமிழிலேயே அழகாகத் தொகுத்து வழங்கியது பொருத்தமாகவும், சிறப்பாகவும் இருந்தது மட்டுமல்லாமல் அமெரிக்காவில் தமிழுக்கு நல்ல எதிர் காலம் உள்ளது என்பதற்கு தகுந்த சான்றாக அமைந்தது.

இவ்விழாவில் சிறுவர்கள் மிக அழகாக நாட்டுப்புறப் பாடல்கள், குறு நாடகங்கள், நகைச் சுவை நாடகங்கள், இசை, நடனம் மற்றும் திரைப்பாடல்கள் அமைத்துப் பங்கேற்றனர். சிறுவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் நல்ல தரமான, அதே நேரத்தில் பார்வையாளர்களை மகிழ்விக்கும் நல்ல தமிழ் படைப்புகளைக் கொடுத்தார்கள். சிறுவர்கள் வழங்கிய பொய்க் கால் குதிரை ஆட்டம், மயிலாட்டம் மற்றும் கரகாட்டம் தமிழ்நாட்டில் ஒரு கிராமிய விழா பார்ப்பது போன்ற மன நிறைவை வழங்கியது.

நிகழ்ச்சிகளைப் பார்த்தவர்களும், படைத்து வழங்கியவர்களும், நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களும், மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டு, தமிழ் மன்றத்தின் அடுத்த நிகழ்ச்சிகளை ஆவலுடன் எதிர்ப்பார்ப்பதாக கூறினார்கள்.

நிகழ்ச்சியின் இடையில் 2005 மற்றும் 2006 ஆம் ஆண்டின் தமிழ் மன்ற செயற்குழு உறுப்பினர்களுக்கு மன்றத்தின் சார்பாக விருது அளித்து சிறப்புச் செய்யப்பட்டது. பின்பு 2007 ஆம் ஆண்டின் செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப் படுத்தப்பட்டனர். தொடர்ந்து தமிழ் மன்றத்திற்கு உதவிவரும் இளைய தலைமுறை யினருக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புச் செய்யப் பட்டனர். இறுதியில் தமிழ் மன்றத்தின் வளர்ச்சியின் முக்கிய தூணாக இருந்து மன்றத்தை தொடர்ந்து வழிநடத்தி வரும் முன்னாள் தலைவர் திரு. மணி மு. மணி வண்ணன் அவர்களை பாராட்டி தமிழ் மன்றத் தலைவர் திரு. தில்லை குமரன் அவர்கள் சிறப்பு விருது அளித்து சிறப்பித்தார்.

தமிழ் மன்றத்தின் வரவிருக்கும் நிகழ்ச்சிகள்:

பொங்கல் விழா - தமிழர் திருநாள்
சனிக்கிழமை சனவரி 20, 2007 மதியம் - கோம்ஸ் துவக்கப் பள்ளி, பிரீமாண்ட்

இவ்விழாவில் பட்டி மன்றம், கவி அரங்கம், தமிழிசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளது. பட்டி மன்றம் மற்றும் கவி அரங்கம் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள விரும்புவர்கள் திரு. குறிஞ்சி குமரன் (treasurer@ bayareatamilmanram.org) அல்லது திரு. தில்லை குமரன் (president@bayareatamilmanram.org) அவர்களை தொடர்பு கொள்ளவும்.

சித்திரைக் கொண்டாட்டம்,
ஏப்ரல் 14, 2007 - தமிழ்ப் புத்தாண்டு திருவிழா

மேலும் விவரங்களுக்கு சுட்டவும் www.bayareatamilmanram.org

டில்லி துரை, செயலாளர்
வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம்

© TamilOnline.com