இந்த நாதஸ்வரத்துக்கு ஐந்து ரூபாய்!
அது எங்கள் தலைதீபாவளி. என் கணவருக்கு சங்கீதத்தின் மேல் காதல். அதனால் தனக்குப் பரிசாகக் கிடைத்த ஒரு நாதஸ்வரத்தை தீபாவளி அன்றுதான் முதல்முதலாக வாசிக்க வேண்டுமென்று தீர்மானமாக இருந்தார். அன்று அதிகாலையில் நான்கு மணியிலிருந்தே வாசிக்க ஆரம்பித்துவிட்டார். நான் இடையிடையே 'சபாஷ்', 'பலே' போன்ற வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டிருந்தேன் (புது மனைவி அல்லவா?).

இதைப் பக்கத்துவீட்டுத் தோழி அவ்வளவாக ரசிக்கவில்லை. அவள் வழக்கம் போல் ஏதோ ஒரு நாதஸ்வர கோஷ்டி வாசித்துக் கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தாள். ஏனென்றால் அன்று ஆறு, ஏழு நாதஸ்வர கோஷ்டிகள் வந்து சென்றனர். அதனால் அவள் சற்றுக் கடுமையாக என்னிடம் "நானும் காலையிருந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்... இந்த நாதஸ்வரம் மட்டும் இந்த வீட்டைவிட்டு ஏன் போகவில்லை? நான் வழக்கமாக ஒரு ரூபாய்தான் கொடுப்பேன்; இவருக்கு ஐந்து ரூபாய் கொடுத்து இந்த தெருவுக்கே வாராதிரு என்று சொல்லப்போகிறேன்" என்று சொல்லிக்கொண்டே பணத்தோடு வந்தாள்... அங்கே அவளுக்கு அதிர்ச்சி. நாதஸ்வரத்துடன் என் கணவர்! அன்று எங்கள் வீட்டில் சிரிப்பு வெடி வெடித்தது.

தாமரை

© TamilOnline.com