தமிழ்நாடு அறக்கட்டளை: மில்வாக்கியில் ஈகைத் திருவிழா
மே 12, 2007 அன்று தமிழ்நாடு அறக்கட்டளையின் மில்வாக்கி கிளை கொண்டாடிய ஈகைத் திருவிழாவில் 500 பேர் கலந்து கொண்டு தமிழகத்தில் பல அறப்பணிகளுக்கு 15,000 டாலருக்கு மேல் வழங்கினர். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள கண்பார்வை இழந்தோர் பள்ளிக்கு பிரெயில் நூல்கள் அச்சிடும் இயந்திரம், சென்னை ஆந்திர மகிளா சபாவில் போலியோவால் பாதிக்கப்பட்ட சிறாருக்கு அறுவை சிகிச்சை, சென்னை ராமகிருஷ்ணா ஆத்மாலயத்தில் 150 குழந்தைகளுக்கு உணவு, உடைகள் போன்ற மனிதாபிமானப் பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் எனத் தமிழ்நாடு அறக்கட்டளையின் மில்வாக்கி கிளைத் தலைவர் வி. வயிரவன் அறிவித்தார்.

மாயாஜாலக் காட்சிகள், மருதாணி இடுதல், காரத்தே, பரதநாட்டியம் உட்பட பல நிகழ்ச்சிகளும் ஈகைத் திருவிழாவைக் கோலாகலம் ஆக்கின. ஆயுள் பாதுகாப்பு மற்றும் குடும்ப பொருளாதாரத்தை திட்டமிடுதல் பற்றியும், மகளிருக்கு பெண் மருத்துவக் குறிப்புக்கள் பற்றியும் கருத்தரங்குகள் நடைபெற்றன. திருமதி. அபிராமி சுப்பு பம்பரம் போல் சுழன்று செயலாற்றி மில்வாக்கி நகரின் இருபது தொழில் நிறுவனங்களை இத்திருவிழாவில் பங்கு பெற வைத்தது விழாவுக்குக் களையூட்டியது. இந்த நிறுவனங்கள் தங்களின் பொருட்களையும், சேவைகளையும் காட்சிக்கு வைத்து விற்பனை செய்தன.

விஸ்கான்சின் இந்து ஆலயத்தில் நடந்த இத்திருவிழாவில் பத்து தமிழ்க்குடும்பங்கள் சமைத்த அறுசுவை உணவை அமெரிக்கர்களும் இந்தியர்களும் விலைக்கு வாங்கி அந்த நிதியை தமிழ்நாடு அறக்கட்டளை திட்டங்களுக்கு வழங்கினர். மிகக் குறைந்த செலவிலும், குறுகிய காலத்திலும் ஏற்பாடு செய்யப்பட்ட இத்திருவிழாவின் மூலம் எதிர்பார்த்ததைவிட ஏராளமான நிதி திரட்டி தமிழகத்திற்கு உதவியுள்ள திரு. வயிரவன் தலைமையிலான செயற்குழுவைத் தமிழ்நாடு அறக்கட்டளையின் துணைத்தலைவர் சோமலெ சோமசுந்தரம் பாராட்டினார். மில்வாக்கி மக்கள் கொடுத்துள்ள ஊக்கத்தால் ஈகைத் திருவிழாவை தொடர்ந்து கொண்டாடி தமிழகத்தில் நலிவுற்றோருக்கு உதவும் பணியைத் தொடருவோம் என விழாவை சிறப்பாகத் தொகுத்து வழங்கிய மீனா வயிரவன் அறிவித்தார்.

சரோ

© TamilOnline.com