சான் ·பிரான்சிஸ்கோ தமிழ் மன்றத்தின் குழந்தைகள் நிகழ்ச்சி
அக்டோபர் 23, 2004 அன்று சான் ·பிரான்சிஸ்கோ வளைகுடாப்பகுதி தமிழ் மன்றத்தின் குழந்தைகள் நாள் நிகழ்ச்சி சான் ஹொசே எவர்கிரீன் வேல்லி உயர் நிலைப்பள்ளி அரங்கத்தில் நடந்தது. மதியம் 2 மணிக்கு கலி·போர்னியா தமிழ் அகாடமி குழந்தைகள் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய வானதி கணேஷின் மேடைத்தமிழும், தமிழ்மன்ற முன்னாள் தலைவர் கணேஷ்பாபுவின் மகன் சபரீஷ்பாபுவின் சமயோசிதப் பேச்சும் எல்லோரையும் கவர்ந்தது. குறுநாடகம், கிராமிய இசை நடனம், திரையிசை நடனம், திரையிசை மற்றும் நாட்டுப்புறப்பாடல்கள் என்று பல்வேறு நிகழ்ச்சிகளில் 15 குழுக்களைச் சேர்ந்த குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். தமிழக வானொலியில் புகழ் பெற்ற "ஜகம் புகழும் புண்ணிய கதை இராமனின் கதையே" என்ற பாடல் மீண்டும் இங்கு உயிர்த்தெழுந்தது. இதில் கலந்து கொண்டு இராமகாதையையே ஓரிரு நிமிடங்களில் மேடைக்குக் கொண்டு வந்த குழந்தைகளில் ஆடை அலங்காரங்களும் பிரமிக்க வைத்தன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளுக்குத் தமிழ் மன்றத்தின் வெள்ளிவிழாக் கோப்பையை அந்தந்த அணியின் ஒருங் கிணைப்பாளர்கள் மூலமாக மன்றத் தலைவர் வழங்கினார்.

ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியின் இறுதியில் கடம் & கடம் ஜுவலர்ஸ் வழங்கிய மோதிரம், தென்றல் பத்திரிக்கைக்கு இலவச சந்தா ஆகிய பரிசுகள் குலுக்கல் முறைமூலம் வழங்கப்பட்டன. "அப்படிப்போடு போடு" என்ற திரைப்பாடலின் இசைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர், சிறுமியர்களோடு வந்திருந்த பல குழந்தைகளும் மேடையில் ஆடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மன்றத் துணைத்தலைவர் (நிர்வாகம்) லோகநாதன் பழனிசாமி பெருமிதத்தில் மிதக்க, மன்றச் செயலாளர் கதிரேசன் நன்றியுரை வழங்கினார்.

கருணாகரன் பழனிசாமி

© TamilOnline.com