கனெக்டிகட்டில் தீபாவளி விழா
நவம்பர் 13, 2004 அன்று கனெடிகட் தமிழ்ச் சங்கம் தீபாவளித் திருநாளை கிளாஸ்டன் பரியின் கெடியன் வெல் பள்ளி வளாகத்தில் கொண்டாடினர்.

பூக்களால் அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்கு ஒளிவீச, சுகாதாரக் கருத்துக் கணிப்பும், தமிழ்ப் புத்தகங்கள் விற்பனையுமாக மதியம் மூன்று மணி அளவில் விழா ஆரம்பமானது. மருத்துவ அறிவை அளந்து கொள்ளும் நோக்கத்துடன் நாம் எடுத்த கருத்துக்கணிப்பிற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

பூமா நம்பிராஜன் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாட, ஸ்ரீமதி இராகவன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க, தலைவர் விஜயசேகர் அவர்களின் வரவேற்புரையுடன் சுமார் ஐந்து மணியளவில் மேடை நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின. குழந்தை அபிநயா நிரஞ்சன் 'ஞானப்பழம் நீயப்பா, தமிழ் ஞானப் பழம் நீயப்பா' என்று ஔவையாராய் வேடமிட்டுப் பாடியது அற்புதம். தன்னைச் சூழ்ந்திருந்த குழந்தைகளை ஆத்திசூடி பாடுமாறு ஔவையார் ஆணையிட, மூன்று முதல் ஒன்பது வயதிற்கு உட்பட்ட மாணவ மணிகள் 'அறம் செய்ய விரும்பு' தொடங்கி 'ஔவியம் பேசேல்'வரை அழகாகக் கூறினர். ஜோதிப்ரியா உதய்சங்கர், ஜெயா விஜய சேகர் மற்றும் அடியேன் இந்தக் குழந்தை களைக் குறுகியகாலத்தில் தயார்செய்த புண்ணியத்தைக் கட்டிக்கொண்டோம்.

தொடர்ந்தது பலகுரல் மன்னன் ஐங்கரனின் இன்னிசை விருந்து. ஐங்கரனும் ஹரிணி வாசுதேவனும் இணைந்து பாடிய பழைய மற்றும் புதிய பாடல்களுக்கு கூட்டம் தாளத்துடன் ஆடிக்களித்தது. 'வசீகரா' என்று காதல் குழைவுடன் பாடப்பட்டபோது அங்கிருந்த காதல் ஜோடிகள் இணைந்து ஆடியது கண்ணுக்கு இனிமை. மொத்தத்தில் அமர்க்களமான தீபாவளிக் கொண்டாட்டம் தான் போங்கள்.

கருத்துக்கணிப்பின் பலனாகக் கனெக்டிகட் தமிழ் சங்கம் இங்கு வாழும் தமிழ் மக்களுக் கென்று பிரத்யேகமாய் மருத்துவ ஆலோசனைக் கூட்டத்தை நிகழ்த்தத் திட்டமிட்டுள்ளது என்பது கொசுறுச் செய்தி.

மரு. வரலட்சுமி நிரஞ்சன்.

© TamilOnline.com