ரஜினியின் மருமகன் தனுஷ்
இன்று கோடம்பாக்கத்தில் அதிகம் பேசப்படுவது தனுஷ் - ஐஸ்வர்யா திருமணத்தைப் பற்றித்தான். இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ரஜினி காந்த் நடிக்கும் 'சந்திரமுகி' படப்பிடிப்பில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் வேளையில் மகளின் திருமணம் அவரது கவனத்தைக் கொஞ்சம் திருப்பிவிட்டது.

நடிகர் தனுஷ் கடந்த மாதம் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஐஸ்வர்யாவுடன் தனது திருமணம் பெரியவர்களால் நிச்சயக்கப்பட்டது தான் என்றும், பத்திரிகைகளில் எங்கள் இருவரைப் பற்றியும் வந்த வதந்திகளை இப்போது பெரியவர்கள் உண்மையாக்கி விட்டார்கள் என்றும் கூறி முதன் முதலாகத் தன்னுடைய திருமண செய்தியை அறிவித்தார்.

இருபத்திரண்டு வயதில் திருமணம் என்பது என்னுடைய இலட்சியம் என்று கூறிய தனுஷ் அதன்படி இப்போது தன்னுடைய இருபத்திரண்டு வயதில் திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் கூறினார்.

நான்கு மாதங்களுக்குள் சந்திரமுகி படத்தை முடிக்கவேண்டும் என்ற சூழலில், திருமணம் முடிந்த கையோடு சந்திரமுகி படக் குழுவினருடன் அயர்லாந்து செல்லவிருக்கிறார் ரஜினிகாந்த்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com