மஹீதாவின் மனங்கவர் நாட்டியம்
ஒன்பது வயதே ஆன மஹீதா பரத்வாஜின் நடனம் ஜனவரி 10, 2005 அன்று மயிலை நாத இன்பம் சார்பில் ராகசுதா அரங்கத்தில் நடைபெற்றது. அமெரிக்காவில் செயிண்ட்லூயி வாசிகளான டாக்டர் மைதிலி மற்றும் சந்திரமௌலி தம்பதியரின் மகள் இவர்.

துதேயமங்களத்துடன் தொடங்கிய கச்சேரி ராகமாலிகையில் அமைந்த ஜதிச்வரத்தின் போது களை கட்டிவிட்டது. அடுத்து வந்த தீக்ஷ¢தர் க்ருதி 'ரூபமுசூசி' (தோடி) வெகு அழகு.

மஹீதாவின் பயிற்சி மற்றும் பாடலின் பொருளுணர்ந்த அபிநய வல்லமையைக் காட்டியது அடுத்த உருப்படி. முருகன் கனி கிடைக்காமல் பழனியாண்டியான கதை, சூரசம்ஹாரம் ஆகியவற்றை மிக நுட்பமாக அபிநயித்தாள் மஹீதா. முக்கியமாக அந்தப் பிள்ளையார் நடைக்கு ஒரு ஷொட்டு உண்டு. வீரம், கோபம், சிருங்காரம் முதலியவற்றை மின்னல் வேகத்தில் மஹீதா முகத்தில் கொண்டு வந்தது இங்கே ஒரு விற்பன்னர் உருவாகிறார் என்று கட்டியம் கூறியது.

அடுத்து வந்த 'கோவர்த்தன கிரிதர' (ஹிந்தோளம்), தில்லானா (பிருந்தாவன சாரங்கா) இரண்டும் நிகழ்ச்சியின் தரத்துக்கு ஏற்ற முத்தாய்ப்புக்கள். பத்மஸ்ரீ அடையாறு லக்ஷ்மணன் (பாட்டு, நட்டுவாங்கம்), ராமா ராவ் (பாட்டு), பாபா பிரஸாத் (மிருதங்கம்), உன்னி கிருஷ்ணன் (புல்லாங்குழல்) ஆகியோர் தங்கள் பணியினைச் செவ்வனே செய்தனர்.

இன்னொரு விஷயம்: இது சென்னை சங்கீத சீசனுக்கு மஹீதாவின் 4 வது கச்சேரி!

மஹீதா அடையாறு லக்ஷ்மணன் அவர்களின் செல்ல சிஷ்யை. சுதா சீனிவாசன் (சிகாகோ) மஹீதாவின் நாட்டியப் பயிற்சியைக் கண்ணும் கருத்துமாய்க் கவனித்துக் கொண்டவர்.

மஹீதாவின் பயிற்சி, அரங்கேற்றம் எல்லாமே அமெரிக்காவிலேயே நடந்தேறியது என்பது ஒரு புதுமையாகவே தோன்றுகிறது.

ஜி. நாராயணன்,
சென்னை.

© TamilOnline.com