எம்.எஸ். அம்மா கொடுத்த புதுவேட்டி
இளம் மிருதங்க வித்வான் ரோஹன் கிருஷ்ணமூர்த்தி (விவரங்களுக்குப் பார்க்க: சாதனையாளர், தென்றல், ஜனவரி 2005) இசையரசி எம்.எஸ்ஸைப் பார்த்ததை இவ்வாறு நினைவு கூறுகிறார்:

நான் முதல் முறையாக 1998ல் எம்.எஸ். அம்மாவைப் பார்க்கும் நல்வாய்ப்பைப் பெற்றேன். நான் மிருதங்கம் வாசிப்பேன் என்று ஒரு நண்பர் மூலம் கேள்விப்பட்ட அவர், மிக விநயமாக, நான் மறுநாள் அவர் வீட்டில் வாசித்துக் காண்பிக்க முடியுமா எனக் கேட்டார். எனக்கு ரொம்ப உற்சாகமாக இருந்தது. சுமார் 20 நிமிடங்கள் நான் வாசித்ததை மிகக் கவனமாகக் கேட்டார்.

அப்போது டி.வி.யில் திருவையாறில் நடக்கும் தியாகப் பிரம்ம உற்சவத்தின் பஞ்சரத்னக் கீர்த்தனை வந்துகொண்டிருந்தது. அதனுடன் சேர்ந்து என்னை வாசிக்கச் சொன்னார். "உன் வயதுக்கு மீறின திறமையுடன், ஒரு தப்பும் இல்லாமல் வாசிக்கிறாய். நல்லது" என்று சொன்னார். "ஒருநாள் என் பாட்டுக்கு நீ வாசிக்கணும்' என்று பெருந்தன்மையோடு அவர் சொன்னதை என்னால் மறக்கமுடியாது.

ஒருமுறை அவர் வீட்டின் பிரபலமான சுக்குக் காப்பியை மேலே சிந்திக் கொண்டுவிட்டேன். உடனே எனக்கு ஒரு புதிய வேஷ்டி கொடுத்தார் அம்மா. இந்த ஆண்டும் அம்மாவைச் சந்திக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் விதி வேறுவிதமாய் நினைத்துவிட்டது.

மாதுஸ்ரீ எம்.எஸ்.

*****


எம்.எஸ். அம்மாவுடன் நெடுநாள் பரிச்சயம் உள்ள என் தந்தை ஆர். ராஜகோபாலன் மற்றும் என் மாமா என்.எஸ். ராமச்சந்திரன் ஆகியோர் மூலம் இசையரசியின் எளிமை மற்றும் மேன்மையைப் பற்றி நிறையக் கேட்டதுண்டு. ஆனாலும் நான் ஜூன் 2000இல் அம்மாவைச் சந்தித்தபோது பிரமித்துத்தான் போனேன். அவரது தெய்வீகம் அவர் அருகிலிருந்தபோது அதிகம் ஒளி வீசியதாகத் தோன்றியது. 'வாழும் காவியம்' ஒன்றன் அருகில் இருக்கிறோம் என்ற உணர்வை அவர் எங்களுள் ஏற்படுத்தவே இல்லை. அவரது எளிமை, அமைதி மற்றும் பரிவு அப்படிப்பட்டது.

என் குழந்தைகளைப் பாடச் சொல்லி, கேட்டு, பாராட்டுவார். தனது உடல்நலக் குறைவைக் கூடப் பொருட்படுத்தார். அப்பழுக்கற்ற, சாதனைகளால் நிரம்பிய கலைஞர் என்றால் என்னைப் பொறுத்தவரை மாதுஸ்ரீ எம்.எஸ். அவர்கள்தாம்.

லதா ஸ்ரீராம்,
கலை இயக்குநர்,
ஸ்ரீ லலித கான வித்யாலயா, ப்ரீமாண்ட், கலி.

© TamilOnline.com