மலிபூ இந்துக் கோவில்: குரு கானசரஸ்வதிக்குப் பாராட்டு விழா
ஆகஸ்ட் 18, 2024 அன்று, மிக அன்புடன் 'குரு கானம்' என்று அழைக்கப்படும் குரு கானசரஸ்வதி அவர்களின் சிறப்பான இசைப்பயணத்தைப் பாராட்டும் விதமாக எடுக்கப்பட்ட விழா மலிபு இந்துக் கோவிலில் நடத்தப்பட்டது. கர்நாடக இசைக்கு அவரது 50 ஆண்டுப் பங்களிப்பை இவ்விழா கொண்டாடியது.

பிரபல வயலின் வித்வான் பத்மபூஷண் Dr. L. சுப்ரமணியம் (குருகானம் அவர்களின் சகோதரர்) மற்றும் அவரது மனைவியும் இசைக் கலைஞருமான Dr. கவிதா சுப்ரமணியம் ஆகியோர் விழாவுக்கு வந்திருந்து மேலும் பெருமை சேர்த்தனர்.

திருமதி கல்பனா திருமலை வரவேற்புரை நல்கினார். மலிபு இந்துக் கோவிலின் தலைவர் திரு சம்பத்குமார், குரு கானம் அவர்களைக் கோவிலின் ஆஸ்தான வித்வான் என அழைத்து, அவரது பங்களிப்பைப் பாராட்டிப் பேசினார்.



Dr. L. சுப்ரமணியம் அவர்கள் தமது சகோதரியுடனான இளவயது நிகழ்ச்சிகளை, எப்படி அவர் எண்ணற்ற சங்கீத ஆர்வலர்கள் மீது செல்வாக்குச் செலுத்தினார் என்பதை நெஞ்சு நெகிழும் வண்ணம் விவரித்தார்.

குரு கானம் அவர்களின் சிஷ்யையும் மகளுமான சங்கீதா, தமது தாயார் தன்மீதும், அங்குள்ள இசைச்சூழலிலும் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தை நினைவுகூர்ந்தார். உலக அளவில் கர்நாடக இசையைக் கொண்டுசெல்ல அயராது உழைத்தார் என வர்ணித்தார்.

குரு கானம் அவர்களின் இசைப்பயணம் மற்றும் இசையுலகத்துக்கு அவர் அளித்துள்ள கொடை குறித்துத் த்ர் ஸ்ரீதர் நரசிம்மன் தொகுத்தளித்துள்ள மின்னூல் ஒன்று விழாவின்போது வெளியிடப்பட்டது. குரு கானம் அவர்கள் 1000 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.



குரு கானம் மற்றும் கணேசரின் வடிவங்களுடன் பிரத்தியேகமாக நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டுச்சேலையை மாணாக்கர்கள் அளித்துக் கௌரவித்தனர்.

குரு கானம் அவர்கள் தமது ஏற்புரையில் தமது நண்பர்களும் சீடர்களும் ஒருங்கிணைந்து தம்மைக் கௌரவிப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார். கானம் அவர்கள் இயற்றிய கிருதிகளைப் பாடியும் அவற்றுக்கு நடனம் ஆடியும் மாணாக்கர்கள் கலை நிகழ்ச்சிகளை வழங்கினர்.

அனுஷா சதீஷ் வழங்கிய நன்றியுரையுடன் சிறப்பான நிகழ்ச்சி நிறைவெய்தியது.

கானம் அவர்களின் கிருதிகள் அடங்கிய மின்னூலைப் பெறக் கீழே உள்ள QR குறியீட்டை வருடவும்.

அனுஷா நடராஜன்,
தென்கலிஃபோர்னியா

© TamilOnline.com