அனிதா வாசனின் பரத நாட்டியம்
ஜனவரி 8, 2005 அன்று குழந்தைகள் நல நிறுவனமான 'March of Dimes'க்கு நிதி திரட்ட அனிதா வாசன் ஒரு நடன நிகழ்ச்சியை, Civic Arts Plaza, Thousand Oaks என்னுமிடத்தில் நடத்திக் கொடுத்தார்.

புதியதொரு ராகமாலிகா வர்ணத்துக்கு அனிதாவின் ஜதிகள் அடுக்கடுக்காய் ஜொலித்தன. கண்ணதாசனின் இனிய 'ஆயர் பாடி மாளிகையில்' பாடலுக்கு அழகாக ஆடினார் அனிதா. அடுத்து, சிவனாக தீபாவும் பார்வதியாக அனிதாவும் ஆடிய ஆட்டம் ஜனரஞ்சகமாக இருந்தது. கடைசியில் தில்லானாவும், 'ராதா ஜயே' பாடலுக்கு அபிநயமும் மனத்தைத் தொடும்படியாக அமைந்திருந்தன. மொத்தத்தில் ஒரு முதல் தரமான நிகழ்ச்சி என்பதில் ஐயமில்லை.

அனிதாவின் தாயார் பத்மினி வாசன் சிறந்த குருவும் ஆவார். அனிதாவின் நாட்டிய நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு இது தெளிவாகியிருக்கும். நிகழ்ச்சியில் வசூலான தொகை குறைப் பிரசவக் குழந்தைகள் நலநிதிக்கு வழங்கப்பட்டது.

பக்கவாத்தியமும், பாபு பரமேஸ்வரன் பாட்டும் நிகழ்ச்சியுடன் ஒன்றி இருந்தது.

இந்திரா பார்த்தசாரதி

© TamilOnline.com