மாலனுக்கு சாகித்ய அகாதமி மொழிபெயர்ப்பு விருது
சாகித்ய அகாதமி, 24 மொழிகளில் வெளியாகும் மொழிபெயர்ப்பு நூல்களில் சிறந்தவற்றுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கிச் சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் 2021ம் ஆண்டுக்கான விருது மாலன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆங்கிலத்தில் இருந்து அவர் மொழிபெயர்த்த 'ஒரு பிணந்தூக்கியின் வரலாற்றுக் குறிப்புகள்' நாவல் (மூலம்: Cyrus Mistry எழுதிய Chronicle of a Corpse Bearer) இந்த விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் பொன்னீலன், சிவசங்கரி, பத்திரிகையாளர் பாவை சந்திரன் அடங்கிய நடுவர் குழு இந்த நூலை விருதுக்குத் தேர்ந்தெடுத்துள்ளது. விருது ரூபாய் 50000 ரொக்கப் பரிசும் கேடயமும் கொண்டது.

திசைகள் இதழ் தொடங்கி, தினமணி, இந்தியா டுடே (தமிழ்), குங்குமம், புதிய தலைமுறை, புதியதலைமுறை கல்வி எனத் தமிழின் முன்னணி இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றியவர் மாலன். பல பத்திரிகையாளர்களை உருவாக்கியவர். இதழியலில் பல புதுமைகளைக் கையாண்டவர். சி.சு. செல்லப்பாவின் 'எழுத்து' இதழ் மூலம் கவிஞராக அறிமுகமான மாலன் எழுத்தாளர், கட்டுரையாளர், பத்திரிகையாளர், விமர்சகர், சொற்பொழிவாளர், தொலைக்காட்சிகளின் செய்தி ஆசிரியர் எனப் பல களங்களிலும் செயல்பட்டவர். இன்றும் ஊடகவியலாளராகச் செயல்பட்டு வருகிறார். (மேலும் வாசிக்க)



© TamilOnline.com