கோவை விஜயா வாசகர் வட்ட விருது
கோவை விஜயா பதிப்பகம் வாசகர் வட்டம் சார்பில், ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர்களுக்கு, புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், கவிஞர் மீரா ஆகியோரின் பெயரிலும், சிறந்த நூலகருக்கு சக்தி வை கோவிந்தன் பெயரிலும், சிறந்த புத்தக விற்பனையாளருக்கு வானதி திருநாவுக்கரசு பெயரிலும் கடந்த ஏழாண்டுகளாக விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளாக எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் பெயரில் சிறந்த படைப்பாளாருக்கு கி.ரா. விருதும் வழங்கப்படுகிறது. தமிழிலிருந்து பிற மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் பல படைப்புகளைத் தந்த கே.எஸ். சுப்பிரமணியன் நினைவாக இவ்வாண்டு முதல், மொழிபெயர்ப்பு விருது வழங்கப்படும் என விஜயா வாசகர் வட்டம் அறிவித்துள்ளது.

இவ்வாண்டுக்கான ஜெயகாந்தன் விருதை எழுத்தாளர் விட்டல் ராவ் பெறுகிறார். மீரா விருதை சாகிப்கிரானும், புதுமைப்பித்தன் விருதை வேலாயுதமும் பெறுகின்றனர். சிறந்த நுாலகருக்கான சக்தி கோவிந்தன் விருது, திருவண்ணாமலை அரசு நுாலக நுாலகர் சாய்ராம் பெறுகிறார். வானதி விருது கரூர் வாணி புக்‌ஷாப் நாகமல்லையாவுக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாண்டுக்கான மொழியாக்க விருதுகள் எம்.ஏ. சுசீலா, கே. நல்லதம்பி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. பிறமொழிகளில் இருந்து தமிழுக்குச் செய்த மொழியாக்கங்களுக்காக எம்.ஏ. சுசீலாவிற்கும், தமிழிலிருந்து கன்னட மொழிக்குச் செய்த மொழியாக்கங்களுக்காக கே. நல்லதம்பிக்கும் இவ்விருது வழங்கப்படுகிறது.

© TamilOnline.com