ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-19b)
ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், தந்திரங்கள், யுக்திகள் யாவை எனப் பலர் பல தருணங்களில் என்னைக் கேட்டதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்துகொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து இதை வடிவமைத்துள்ளேன். ஆனால் இது வெறும் தமிழாக்கமல்ல. இதில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்ட உத்தேசம்.

★★★★★


கேள்வி: நான் சமீபத்தில் ஒரு நிறுவனத்தை ஒரு சக நிறுவனரோடு ஆரம்பித்துள்ளேன். ஓரிரு தேவதை மூலதனத்தாரிடமிருந்தும் சிறிய அளவு மூலதனம் பெற்று இதை நடத்தி வருகிறோம். இந்த நிலையில் விதை நிலை மூலதனத்தாரிடம் சென்று முயல்கையில் "இந்த யோசனை பெருவளர்ச்சியைச் சமாளிக்குமா" (will it scale?) என்று பலர் கேட்கிறார்கள். இவ்வளவு புதிய நிறுவனம் இப்போதே பெருவளர்ச்சியைப் பற்றி யோசித்து நடைமுறைப்படுத்த வேண்டுமா? இல்லை என்றால் எவ்வாறு மூலதனத்தாருக்கு நம்பிக்கையளிப்பது? விளக்குங்களேன்!

கதிரவனின் பதில்: பெருவளர்ச்சி கண்டபின் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆரம்பநிலையிலேயே அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றாலும், நிறுவனம் மூலதனம் பெறவேண்டுமானால் அதைப்பற்றி யோசித்தே தீரவேண்டும் என்று சென்ற பகுதியில் கண்டோம். மேலும், பெருவளர்ச்சி என்றால், நிறுவனத்தின் விற்பொருள் அல்லது சேவை பெருமளவில் விற்கப்படும் நிலை என்றும் மூலதனத்தாரின் கவலை அப்போதாவது உங்கள் நிறுவனம் லாபகரமாக நடைபெற இயலுமா என்பது என்றும் கண்டோம்.

அதாவது விற்பொருளின் அடிப்படை அலகின் (basic unit) விற்பனை விலை, அதன் உற்பத்திச் செலவு மற்றும் வணீகரீதியான செலவு குறையுமா என்பதுதான் முக்கியமான கேள்வி.

அடிப்படை செலவு அடிப்படை விலையை விடக் குறைய வேண்டும் என்பது விற்பனை அதிகம் வளர்ந்து மிகுந்த உயரத்தை அடையும் போதுதானே ஒழிய, விற்பனை ஆரம்பிக்கும் போதே அல்ல. சிலிக்கான் பள்ளத்தாக்கில், நிறுவனங்கள் லாபத்தைவிட வேக வளர்ச்சியின் மேல்தான் குறிவைக்க வேண்டும் என்பது மூலதனத்தாரின் கருத்து, செலவை அதிகரித்தால் வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க முடியும் என்றால் அது மிக நல்லது என்றே அவர்கள் கருதுவார்கள். ஏனெனில் அப்போது நிறுவனம் இன்னும் அதிக விலைமதிப்பில் மேலும் மேலும் மூலதனம் பெற வேண்டியிருக்கும். அப்போது முதலில் மூலதனமிட்டவர்களின் பங்கு மதிப்பு உயர்கிறது, மேலும் நிறுவனத்தின் இன்னும் அதிக சதவிகிதத்தை மூலதனத்தார் பெறுவார்கள்!

ஆனால் முன்பு கூறியபடி, ஒரு வளர்ச்சி நிலையை அடைந்த பின் வளர்ச்சி விகிதம் தானாகவே குறைய ஆரம்பிக்கும். இதைப் பெரிய எண்ணிக்கை விதி (Law of Large Numbers) என்பார்கள். அதாவது ஒரே அளவு விற்பனை தொடருமானால் வளர்ச்சி விகிதம் குறைவானதாக இருக்கும். இதை எளிதாக விளக்குகிறேன். முதல் வருட விற்பனை ஒரு டாலர் என்றும், ஒவ்வொரு வருடமும் ஒரு டாலர் விற்பனை அதிகரிக்கிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இரண்டாம் வருடம் 100 சதவிகிதம் அதிகரிப்பு. ஆனால் மூன்றாம் வருடம் அதே ஒரு டாலர் அதிகரிப்பு 50 சதவிகிதந்தான். நான்காம் வருடம் 33 சதவிகிதம்! அதனால் வளர்ச்சி விகிதம் அதிகரிக்க வேண்டுமானால் வரவின் அளவும் அதிகரித்துக் கொண்டே போகவேண்டும். அது சில வருடங்களுக்குப் பின் இயலாது.

மேலும், நிறுவனம் வளர வளர வணிகப் போட்டியும் வளரும். அதனால் வரவை அதிகரிப்பது மேலும் கடினமாகும். அதற்கான செலவும் அதிகரிக்கும். அதனால் ஒரு வளர்ச்சி நிலையை அடைந்த பின் லாபத்தைப் பற்றிய கவலை ஆரம்பிக்கும். அப்போது அடிப்படை அலகுக்கான செலவு என்ன என்பதைத் துல்லியமாகக் கணித்து, அதைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது.

அடிப்படை அலகின் விற்பனை விலையை குத்து மதிப்பாகக் கணிக்க இயலும். ஆனால் அடிப்படை அலகுக்கான செலவைக் கணிக்க பல அம்சங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று முன்பே குறிப்பிட்டோம். அந்த அம்சங்களை அடுத்து விவரிப்போம்.

பெரும்பாலான நிறுவனங்கள் அளவுசார் ஆதாயங்கள் (economies of scale) என்னும் கோட்பாட்டைச் சார்ந்து செயல்படுகின்றன. அதாவது, ஒரு பொருளின் அடிப்படை அலகின் உற்பத்தி செலவு, அதன் உற்பத்தியளவு அதிகரிக்க அதிகரிக்க குறைந்து கொண்டே வரும். ஏனெனில், மொத்த உற்பத்திக்கான செலவு அதிகமான எண்ணிக்கையால் வகுபடுகிறது. ஆனால், அந்த மொத்தச் செலவும் அதிகரிக்காதா, அப்புறம் எப்படி அடிப்படை அலகின் செலவு குறையும் என்று நீங்கள் முணுமுணுப்பது எனக்குக் கேட்கிறது. அப்படி வாருங்கள் வழிக்கு! விளக்குகிறேன்.

ஒரு பொருளை உற்பத்தி செய்யவேண்டும் அல்லது ஒரு அடிப்படை அலகு சேவையளிக்க வேண்டும் என்றால் அதற்கான செலவு இரண்டு வகைப்படும்: நிலைத்த செலவு (fixed cost), மாறுபடும் செலவு (variable cost). நிலைத்த செலவு என்றால் ஒரே ஒரு பொருள் உற்பத்தி செய்ய வேண்டுமானாலும் தேவைப்படக் கூடிய செலவு. உதாரணமாக, பொருளைத் தயாரிக்க ஓர் இயந்திரம் வேண்டுமென்றால் அது ஒரு பொருளைத் தயாரித்தாலும் நூறு பொருளைத் தயாரித்தாலும் அந்த இயந்திரத்தை ஒரே விலை கொடுத்துத்தான் வாங்கியாக வேண்டும். அதேபோல் தொழிற்சாலை அமைக்கும் செலவு, அவற்றைச் செயல்படுத்தத் தேவையான குறைந்தபட்சத் தொழிலாளிகளின் கூலி, போன்று பல உதாரணங்களைக் கூறலாம்.

ஆனால் அதெல்லாம் பொருள் உற்பத்தி உதாரணங்கள்தானே? மென்பொருள் சேவைகளுக்கு (Software as a service) அந்த உதாரணங்கள் ஓத்து வராதே என்ற கேள்வி எழுவது நியாயந்தான். இதற்கு இரண்டு விளக்கங்கள் உள்ளன. முதலாவது தங்கள் சொந்தத் தகவல் மையங்களைத் தாங்களே இயக்கும் சேவையளிப்பு நிறுவனங்கள். மற்றவை மேகக் கணினிகளைப் பயன்படுத்தும் சேவையளிப்பு நிறுவனங்கள்.

மேகக் கணினிகள் பெருமளவில் பயன்படுத்தப் படுமுன் ஆரம்பிக்கப்பட்டு வளர்ந்த மென்பொருள் சேவை நிறுவனங்கள் தங்கள் சொந்தத் தகவல் மையங்களிலிருந்த சேவைக் கணினிகளைக் கொண்டுதான் சேவையளித்தன. சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்தை இதற்கு நல்ல உதாரணமாகக் காட்டலாம். அவற்றுக்கு மிகச்சிறிய அளவில் வைத்துக்கொள்ளக் கூடிய தகவல் மையத்தையும் அத் தகவல் மையத்தையும், கணினிகளையும் பராமரிக்கத் தேவையான தொழிலாளிகள் நிலைத்த செலவாக வைத்துக் கொள்ளலாம்.

சமீப காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட சேவை மென்பொருள் நிறுவனங்கள் பெரும்பாலும் மேகக் கணினிகளையே பயன்படுத்திச் சேவையளிப்பதால் அவற்றுக்கு நிலைத்த செலவு சற்று குறைவுதான், ஒரு சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் சேவையளிக்கத் தேவையான அளவுக்கு மேகக் கணினிகளையும், மின்வலைத் தொடர்பையும் வைத்துக் கொண்டால் போதும். அதுதான் நிலைத்த செலவாகும். கணினிகளைப் பராமரிக்கும் தொழிலாளிகள் செலவு கிடையாது. வாடிக்கையாளர்கள் அதிகரிக்க அதிகரிக்க மேகக் கணினிகளையும் அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

எவ்வாறு நிறுவனம் செலவைக் கட்டுப்படுத்தி, பெருவளர்ச்சி நிலையில் லாபகரமாக நடத்த முடியும் என்பதைப் பற்றி 'வரும் பகுதிகளில் காண்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com