உருண்டைக் குழம்பு
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1/2 கிண்ணம்
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 2
அரிசிமாவு - 2 தேக்கரண்டி
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கேற்ப
தாளிக்க
எண்ணெய், கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை.
மசாலா (வறுத்து அரைக்க)
கடலைப்பருப்பு - 2 மேசைக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
மிளகாய் வற்றல் - 3
பெருங்காயம் - சிறிதளவு

செய்முறை
பருப்புகளை 1 மணி நேரம் ஊறவைத்து, மிளகாய், தேங்காயுடன் நறநறவென்று அரைக்கவும். வாணலியில் கடுகு தாளித்து, அரைத்த பருப்பை 5 நிமிடங்கள் சிறிது உப்பையும், அரிசி மாவையும் சேர்த்து வதக்கவும். ஆறினதும், சிறு உருண்டைகளாகப் பிடித்து ஆவியில் பத்து நிமிடம் வேக வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து, உப்பு, வறுத்தரைத்த மசாலாவைச் சேர்த்து, நிதானமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விடவும். வெந்த உருண்டைகளையும் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விடவும். தாளித்து சூடான சாதத்துடன் பரிமாறவும்.

வசுமதி கிருஷ்ணஸ்வாமி

© TamilOnline.com