அட்லாண்டா: 175 தமிழ் நூல்கள் வெளியீடு
இளம் எழுத்தாளர்கள் சாதனை!
வட அமெரிக்க வரலாற்றிலேயே, எழுத்தாளர் திரு இராமகிருஷ்ணன் தம் வாழ்த்துரையில் கூறியதுபோல், தமிழ்கூறும் நல்லுலகின் வரலாற்றிலேயே முதல் முறையாக அட்லாண்டாவைச் சேர்ந்த கம்மிங் தமிழ்ப்பள்ளியும், Tamilezhuthapadi.org அமைப்பும் இணைந்து செப்டம்பர் 12, 2021 அன்று 175 இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களை வெளியிட்டுள்ளன.

இந்தப் பயணம், "நான் ஏன் தமிழ் படிக்க வேண்டும்?" என்று கேட்ட அமெரிக்காவில் வாழும் ஒரு தமிழ்க் குழந்தையிடமிருந்து தொடங்கியது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா? தமிழை நோக்கி அவர்களை வலுக்கட்டாயமாக இழுப்பதைவிட, தமிழை அவர்கள் கையிலேயே கொண்டுபோய்ச் சேர்த்தால் என்ன என்று தோன்றியது. கம்மிங் தமிழ்ப் பள்ளிக்கென்று ஒரு சிறார் நூலகம் அமைக்கும் எண்ணம் தோன்றியது.

நூலகம் என்றதும் முதலில் தேட ஆரம்பித்தது சிறுவர் நூல்களைத்தான். இன்றைய தலைமுறை அதிகம் அன்றாடம் பார்க்கும் விடயங்களைக் கொண்ட புத்தகங்கள் தமிழில் அரிதாகவே இருந்தன. அதற்காகத் தமிழ்நாட்டிலுள்ள நூலகங்களையும், பல்கலைக்கழகங்களையும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டோம்.

எங்கேயும் எதிர்பார்த்த மாதிரி புத்தகம் கிடைக்கவில்லை. தமிழுக்கென்று ஒரு தளம் அமைக்க முடிவுசெய்து ஒரு நிறுவனத்திடம் கேட்டபோது, செய்ய இயலாதென்று மறுத்துவிட்டார்கள். ஆனால் பார்சி மொழிக்கென்று ஒரு தளத்தை அந்த நிறுவனம் உருவாக்கிக் கொடுத்திருந்தது. அதனால் என்ன, நம் தமிழுக்கு நாமே உருவாக்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. அப்படி உருவானதுதான் Tamilezhuthapadi.org என்ற இணையதளம். இது தமிழுக்காகவே உருவாக்கப்பட்டது. நிகழ்நிலையில் புத்தகத்தை வெளியிடும் செயல்முறையையும், அதற்கான செயலியையும் உருவாக்க ஆறு மாதங்கள் ஆயின.



இந்தச் செயலிமூலம் உருவாகும் ஒவ்வொரு புத்தகமும் பதிப்பு உரிமத்தின் கீழ் சில விதிவிலக்குகளைக் கொண்டிருக்கிறது. அதாவது, நான் வெளியிட்ட ஒரு புத்தகத்தை, நீங்கள் உங்கள் கற்பனைக்கேற்ப எழுதியும் வெளியிடலாம், வண்ணப் படங்களையும் அவ்வாறு செய்து வெளியிடலாம். Creative Commons, அதாவது ஒருவருடைய படைப்பை copyright என்ற பெயரில் அவர்களே வைத்திராமல் அனைவரும் பயன்பெற வேண்டும் என்ற கருத்தில் அமைந்தது அது.

இளம் எழுத்தாளர்கள், அவர்களது பெற்றோர் மற்றும் ஆசிரியர் குழுவுடன் இணைந்து 175 புத்தகங்களயும் சமர்ப்பித்தவுடன், நாங்கள் உடனே இணையத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. இதற்கென்று ஒரு தன்னார்வலர்கள் குழு அமைத்து ஒவ்வொரு புத்தகத்தையும் சரி பார்த்துப் பதிவேற்றினோம். அவ்வாறே சிறார் எழுதிய நிகழ்நிலைப் புத்தகங்கள், அச்சேறி வழுவழுப்பான காகிதங்களில் வண்ணப் புகைப்படங்கள் கொண்ட அழகிய புத்தகங்களாக உருவாயின.

செப்டம்பர் 12ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு எல்லா இளம் எழுத்தாளர்களின் புத்தகங்களையும் ஒரே மேடையில் வெளியிட்டோம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிக்கு அட்லாண்டாவைச் சேர்ந்தோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்ததோடு, புத்தகங்களையும் வெளியிட்டுத் தந்தனர். எழுத்தாளர் திரு. இராமகிருஷ்ணன் ஐயா அவர்கள் காணொளி மூலம் எங்கள் இளம் எழுத்தாளர்களைப் பாராட்டியது அன்றைய நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாகும். ஜியார்ஜியாவின் உலக மொழிகள் மற்றும் உலகளாவிய வேலை முயற்சிகளுக்கான திட்ட நிபுணர் திரு. பேட்ரிக் வாலஸ் குழந்தைகளைப் பாராட்டி ஊக்குவித்தார்.

எமது இளம் எழுத்தாளர்களின் படைப்புக்களை அவசியம் படியுங்கள்: Tamilezhuthapadi.org

தீபா அகிலன்,
முதல்வர், கம்மிங் தமிழ்ப்பள்ளி, அட்லாண்டா, ஜியார்ஜியா

© TamilOnline.com