ரஜினியின் குதிரை ஓட்டம்
வருகிற தமிழ் வருடப்பிறப்பிற்கு ரஜினியின் 'சந்திரமுகி', கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்', விக்ரமின் 'அந்நியன்', விஜய்யின் 'சச்சின்' ஆகியவை திரைக்கு வரவிருக்கின்றன. 'பாபா' படத்திற்குப் பிறகு ரஜினியின் 'சந்திரமுகி'யை மிக ஆவலுடன் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படத்திற்கான ஆடியோ கேசட் வெளியீட்டு விழா சென்னை கன்னிமாரா ஹோட்டலில் நடந்தது. நிகழ்ச்சியில் பேசிய ரஜினி, ''யானை கீழே விழுந்தால் தான் மறுபடியும் எழுவதற்கு லேட்டாகும். நான் குதிரை. விழுந்தவுடனே எழுந்திருச்சிருவேன்...'' என்று பேசி, பாபாவின் தோல்வியில் தான் துவண்டு விடவில்லை என்பதைச் சொல்லாமல் சொன்னார்.

படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று உறுதியுடன் கூறும் ரஜினி, படத்தின் வெற்றிக்காக திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசித்து வந்தார். இதற்கிடையில் கமலின் 'மும்பை எக்ஸ்பிரஸ்' திரைக்கு வருவதற்கு கொஞ்சம் தாமதமாகலாம் என்று தெரிகிறது.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com