முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்து மரணம்!
சென்னையிலுள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருந்த அ.தி.மு.க வின் அவைத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை தலைவருமான கா. காளிமுத்து சிகிச்சை பலனின்றி, நவம்பர் 8ம் தேதி காலமானார். அவருக்கு வயது 64.

சில மாதங்களுக்கு முன்பு நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதாவால் முதலில் அறிவிக்கப்பட, தன் உடல் நிலையை காரணம் காட்டி போட்டியிலிருந்து விலகினார் காளிமுத்து.

இந்நிலையில் கடந்த வருடம் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட இவர் சில மாதங்களுக்கு முன்பு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். கடந்த அக்டோபர் மாதம் இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, முதல்வர் கருணாநிதி, ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி மற்றும் பல்வேறு தலைவர்கள் காளிமுத்து மறைவுக்கு இரங்கல் தெரிவித்தனர். இவரின் மறைவையொட்டி அ.தி.மு.க. மூன்றுநாட்களுக்கு துக்கம் அனுசரித்தது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள, இவரின் சொந்த ஊரான ராமுத்தேவன்பட்டிக்கு காளிமுத்துவின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன.

இறுதி சடங்கில் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் மறைந்த தலைவரின் இறுதிச்சடங்கில் ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ கலந்து கொண்டது முக்கியமானதாகும்.

காளிமுத்துவின் மறைவு அ.தி.மு.கவுக்கு ஈடு செய்ய இயலாத இழப்பு என்று பொதுச்செயலர் ஜெயலலிதா கூறினார்.

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com