பெ.சு. மணி
தமிழின் சிறந்த ஆய்வியல் அறிஞரும் எழுத்தாளருமான பெ.சு. மணி (87) காலமானார். நவம்பர் 2, 1933ல், திருவண்ணாமலை அருகே உள்ள கீழ்பெண்ணாத்தூரில் சுந்தரேசன் - சேதுலட்சுமி இணையருக்குப் பிறந்தவர் மணி. புகுமுக வகுப்பை முடித்தபின் அஞ்சல் துறையில் பணியாற்றினார். இளவயது முதலே கிடைத்த நேரத்தை வாசிப்பதிலும் சொற்பொழிவுகளைக் கேட்பதிலும் ஈடுபட்டார். ம.பொ.சி.யின் பேச்சும் எழுத்தும் இவரை மிகவும் கவர்ந்தன. அவரது தமிழரசுக் கழகத்தில் இணைந்தார். இவரது முதல் நூல் 'இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்' என்பதாகும். தொடர்ந்து பல நூல்களை, இதழ்களில் கட்டுரைகளை எழுதினார்.

தேசப்பற்று அதிகம் கொண்டிருந்த இவர், சுப்பிரமணிய சிவாவைக் குறித்து 'வீரமுரசு சுப்பிரமணிய சிவா' என்ற நூலை எழுதினார். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது. தொடர்ந்து ராமகிருஷ்ண இயக்கத்தின் மீது ஏற்பட்ட பற்றால், 'தமிழகத்தில் ராமகிருஷ்ண இயக்கம்', 'ஸ்ரீசாரதா தேவி வாழ்க்கை வரலாறு', 'விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள்' போன்ற நூல்களை எழுதினார். பாரதியியல் அறிஞரும்கூட. பாரதியின் எழுத்துக்களை ஆராய்ந்து, 'பாரதியாரின் ஞானரதம் மூலமும் ஆய்வும்', 'சமூகச்சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்' உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார். ம.பொ. சிவஞானம் - வாழ்க்கை வரலாறு, வெ.சாமிநாத சர்மா - வாழ்க்கை வரலாறு, வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம், வ.வே.சு. ஐயரின் கம்பராமாயணக் கட்டுரைகள் உள்ளிட்ட தொகுப்பு நூல்களையும் தந்துள்ளார்.

தமிழ்நாடு அரசின் 'பாரதி விருது' உள்படப் பல்வேறு விருதுகளும் பாராட்டுகளும் பெற்றவர். கிட்டத்தட்ட 90 நூல்களை எழுதியுள்ள பெ.சு. மணி, சென்னையில் காலமானார்.

ஆய்வியல் அறிஞருக்குத் தென்றலின் அஞ்சலி!

© TamilOnline.com