பாரதி தமிழ்க் கல்வி: பொங்கல் விழா
ஜனவரி 17, 2021 அன்று, கலிஃபோர்னியா மாகாணத்தின் செரிட்டோஸ் நகரிலுள்ள பாரதி தமிழ்க் கல்வியின் 6வது ஆண்டு பொங்கல் விழா இணையம் வழியே முதல்வர் திரு செந்தில்நாதன் தலைமையில் சிறப்பாக நடந்தது. நிகழ்வைத் திரு கணேசன் மற்றும் திருமதி சுனிதா நகைச்சுவையுடன் தொகுத்து வழங்கினர். முதல்வர் தனது வரவேற்புரையில் இன்றைய நிலையைப் (COVID - online classes) பற்றிப் பேசிவிட்டு, விழா ஒருங்கிணைப்பாளர் திருமதி ஜெயசுதா அவர்களைப் பாராட்டினார்.

மாணவர்களுக்காக வரைபடம், கூட்டாஞ்சோறு, கலை நிகழ்ச்சி என்ற தலைப்புகளிலும், பெற்றோர்களுக்கு, கோலம், பாரம்பரிய சமையல் மற்றும் பொங்கல் புகைப்படம் என்ற தலைப்புகளிலும் நிகழ்ச்சி பிரிக்கப்பட்டிருந்தது. இதில் அறுபதுக்கும் மேலானோர் பங்கேற்று காணொளிகளையும், படங்களையும் கொடுத்திருந்தனர். திரு கணேசன் இவற்றைத் தொகுத்திருந்தார். DJ திரு N.D. ராஜேஷ் இணையத்தில் ஒளிபரப்பி, நேரில் நிகழ்ச்சியை பார்க்கும் உணர்வை ஏற்படுத்தினார்.

மாணவர்கள் செய்யோனின் வயலின் இசை, ஸ்வாதி மற்றும் சஹானாவின் நடனம், சாரங்கின் கீ போர்டு இசையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. தொடர்ந்து நேஹா பாரதியராக வேடமிட்டுப் பாடியும், அர்ஜுன் ரஜினியாக வேடமிட்டுப் பாடியும் அசத்தினர். விப்ரா, ரித்தீஷ், சஞ்சனா, ஜெய்சித்தார்த், விஸ்வாதிகா பொங்கல்பற்றி குழந்தை மொழியில் சிறப்பாகப் பேசினார்கள். யாஷிதா, சஹானா, அட்லின், தளிர், அர்ஜுன், அக்ஷதா, அனன்யா பொங்கல் சமைப்பது எப்படி என்று சொப்புச் சாமான்களை வைத்துச் செய்துகாட்டினர்.

மாணவர்கள் ஸ்பைடர்மேன், ஹல்க், மினியன்ஸ், லெகோ, ஹாரி பாட்டர் உள்ளிட்ட பல ஹாலிவுட் நட்சத்திரங்கள் பொங்கல் கொண்டாடுவதைக் கற்பனைத் திறனில் வரைந்த படங்களை செல்வி நித்யஸ்ரீ தொகுத்த காணொளி சுவையாக இருந்தது. திருமதி சுதா, திருமதி லாவண்யா, திருமதி சுனிதா ஆகியோரின் கோலங்கள் நன்றாக இருந்தன.



அட்லின், சஞ்சனா கிராமியப் பாடலுக்கு ஆடினர். தளிர் காட்டுவாசியாகவும் அக்ஷதா நகரப் பெண்ணாகவும் நடனம் ஆடினர். சித்தார்த்தும் நித்யஸ்ரீயும் குத்துப் பாட்டுக்கு ஆடினர். திருமதி மைதிலி தலைமையில் ஆரவ், இன்பா, கவின், இனியா, மானவ், நேஹா, மின்னல் பங்கேற்று சமூகவிலகல் விதிகளைப் பின்பற்றி நடத்தப்படுவதான வெளிப்புறப் படப்பிடிப்பு குறித்த குழு நடனம் கலகலப்பில் ஆழ்த்தியது.

தொடர்ந்து சாஹஸ் தொண்டார்வ நிறுவனம் செய்யும் சமூகப் பணியையும், COVID தொடர்பான விழிப்புணர்வையும் பகிர்ந்து கொண்டனர். மாணவர்கள் அனன்யா, ஹரீஷ், சஞ்சனா, ஆல்வின், அபூர்வா, ஐஸ்வர்யா மற்றும் அனு ஆகியோரின் தன்னார்வச் செயல்பாடுகள் பற்றிய காணொளி தொகுத்து வழங்கப்பட்டது.

ஹரிஷ் தானே எழுதிப் பாடிய குட்டிக்கதை பாடலும், மோனிகா, நவ்யா, ஜென்யாவின் கர்நாடக இசையில் அமைந்த தமிழ்ப்பாடலும் பார்வையாளர்களை மெய் மறக்கச் செய்தன. இனியா ராஜன், ருத்வி செந்தில், அபூர்வா மூர்த்தியின் புகைப்படங்களும், ரம்யா ராஜ் (மில்லெட் சாட்), திரிஷா நாதன் (ராகி சியா புட்டிங்),ஷோபனா செந்தில் (அற்புத இட்லி) சமையலும் சிறந்தவற்றுக்கான பரிசுகளைப் பெற்றன. குழந்தைகளுக்கான கலைநிகழ்ச்சிகள் ரிஹானாவின் சிறப்பான நடனத்துடன் முடிவுற்றன. துணை முதல்வர் திருமதி காயத்ரி நன்றியுரை வழங்கினார்.

'நாட்டாமை ரிட்டன்ஸ்' என்ற தலைப்பில் திருமதி ராதிகா நாராயணனின் இயக்கத்தில், திரு நாராயணன், திரு சுரேஷ், திருமதி மாலினி, செல்வன் ஆதித்யாவின் நடிப்பில் COVID விழிப்புணர்வு நகைச்சுவை நாடகத்துடன் பொங்கல் விழா இனிதே நிறைவுற்றது.

கணேசன் கௌரிகாந்தன்,
செரிடோஸ், கலிஃபோர்னியா

© TamilOnline.com